Friday, August 3, 2018

விண்ணரசு, மணமகனின் தந்தை

இளவரசனுக்கு
தடபுடல் திருமண விருந்த
ஏற்பாடு செய்த
அரசன் எனலாம்
விண்ணரசை.

மணவிருந்து தயாரானபின்,
பந்திகள் பரிமாறத் தயாராயின
ஆனால்
அழைக்கப்பட்டவர்களோ
விருந்தை நிராகரித்தனர்.

கொழுத்தக் கன்றுகள்
அடித்தாகிவிட்டது,
விருந்துக்காய் எல்லாம்
சமைத்தாகிவிட்டது,
அழைக்கப்பட்டோ ரை
அழைத்துவாருங்கள்,
அரசன் ஆணையிட்டான்.

அழைக்கப்பட்டோ ரோ
அவரை
அவமானப்படுத்தினர்.

தோட்டத்தில்
எனக்கின்று
வேலை இருக்கென்று
ஒருவனும்,

வியாபார இருக்கும்போ
விருந்தென்ன விருந்தென்று
இன்னொருவனும்,

சாக்குப் போக்கு எனும்
போர்வை போர்த்தி
பார்வை விட்டு விலகினர்.

பழமரத்தைப்
பறவைகள் நிராகரிப்பதை
ஆத்திரத்தோடு
பார்த்தான் அரசன்.

பணியாளர்களை அழைத்தான்.
செல்லுங்கள்,
அழைக்கப்படோ ர்
விருந்துண்ணும்
தகுதியை தவற விட்டனர்.

நீங்கள் போய்
பார்வையில் படுவோரையெல்லாம்
திரட்டி வாருங்கள்.

வீதியில் நடப்போர்
முடமாகிக் கிடப்போர்
வறுமையில் உழல்வோர்
பெருமையில் சுழல்வோர்
எல்லோரையும் கூட்டி வாருங்கள்.

சமத்துவ விருந்து
சமைத்தாகி விட்டது.
என்றார்.

ஊழியர் சென்றனர்,
வழியில் தங்கள்
விழியில் விழுந்தோரையெல்லாம்
ஆராயாமல் அழைத்து வந்தனர்.

அதில் ஒருவன்
திருமண ஆடையின்றி இருந்தான்.

அரசன் பந்தி அருகே
வந்து நின்றான்.
கூட்டத்தைப் பார்த்து
ஆனந்தமடைந்தான்.

சுற்றுமுற்றும் பார்த்த
அரசனின் பார்வை
ஓவியத்தில் குறைகண்ட
ஓவியனின் கண் போல
சுருங்கியது.
அங்கே நின்றிருந்தான்
திருமண ஆடையின்றி வந்தவன்.

அரசன்
தாமதிக்கவில்லை.
பொருத்த ஆடை அணியாதவனை
புறந்தள்ளினார்.

அரச விருந்து
ராஜ கிரீடம் போல
கம்பீரமாய் இருந்தது.
விருந்து உண்டவர்கள்
தெரிந்து கொண்டவர்கள்.

சதுரங்க விளையாட்டுக்கு
மட்டையோடு செல்பவன்
மடையனாய் தான்
இருக்க முடியும்.
அதுபோலவே இறையரசு.

தீமையோடு
யுத்தம் செய்யாமல்,
தேவையான
ஆயத்தம் செய்யாமல்
விண்ணக வாழ்வு வருவதில்லை.

விண்ணரசின் அழைப்பு
மண்ணகத்துக்கு அனுப்பியாயிற்று.
அசுத்தமாயிராமல்
ஆயத்தமாயிருங்கள்

தயாராய் இல்லாத எவரும்
தரிசனம் பெறல் இயலாது.

அழைக்கப்பட்டோ ர் பலர்
தேர்ந்து கொள்ளப்பட்டோ ர் சிலர்.

No comments:

Post a Comment