இயேசுவின்
இறப்பை உறுதிசெய்ய
குருக்கள் விரும்பினார்கள்.
இறக்காமல் இறங்கிவிடுவானோ
என்னும்
பயம் அவர்களுக்கு.
படைவீரர்கள்
இயேசுவின் சிலுவையருகே
வந்தார்கள்.
இயேசு
மரணத்தோடு எப்போதோ
பயணித்து விட்டிருந்தார்.
படைவீரர்கள்
ஈட்டியை எடுத்து
இயேசுவின் விலாவில் குத்தினர்.
இரத்தத் துளிகளும்
நீரும்
கசிந்தன
சாவுச் செய்திக்கு அது
முற்றுப் புள்ளியானது.
இறைவனின் உடலில் பட்ட
கடைசிக் காயமாய்
அது
உடலில் தங்கியது.
இயேசுவின் உடலை
எடுக்கவும்
அடக்கவும்
அனுமதி விடுக்கப்பட்டது
சூசை என்னும் சீடரால்.
பிலாத்து அனுமதி அளித்தான்.
இயேசுவின் உடல்
சீடர்களால் தரையிறக்கப்பட்டது
தாயின் மடியில்
சேயின் உடல் சலனமற்றிருந்தது.

அன்னையின் மனதில்
வேதனை வாள்
ஊடுருவியது.
தொழுவம் முதல்
கல்வாரி வரை
காட்சிகள் கண்ணீரோடு கசிந்தன.
இயேசுவை
யூத முறைப்படி
புதுக் கல்லறை ஒன்றில்
அடக்கம் செய்தார்.
சூட்சியின் சந்ததியினர்
பிலாத்துவிடம் வந்தனர்.
இயேசு,
உயிரோடு இருந்தபோது
மூன்று நாளுக்குப் பின்
மீண்டு வருவேன்
என்றான்
உயிர்த்தெழுதல் உண்டெனக்கு
சாவு எனக்கு
தற்காலிக ஓய்வு என்றான்.
எனவே கல்லறையை
காவல் காக்க வேண்டும்
இல்லையேல்
உடலை எடுத்துச் சென்றுவிட்டு
இயேசு
உயிரை உடுத்துச் சென்றதாக
சீடர்கள் கதையளக்கக் கூடும்
என்றனர்.
சதிகாரர்களின்
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
காவலர்கள் கல்லறைக்குக்
காவலர் ஆனார்கள்.
கல்லறைக்கு
முத்திரை சங்கிலிகள் கட்டப்பட்டன.
No comments:
Post a Comment