நண்பகல் துவங்கி
மூன்று மணி வரை
நகர் முழுவதும்
இருட்டு விரிக்கப்பட்டது.
சிலுவையில் தொங்கிய
இயேசு
தாகமாயிருக்கிறேன்
என்றார்.
மனிதம் மீதான
அவருடைய தாகத்தை
புரிந்து கொள்ள இயலாத
படைவீரர்கள்
தண்ணீரை நீட்டினார்கள்.
இயேசு
நாவை நனைத்துக் கொள்ள
ஆசைப்படவில்லை
உலகை அணைத்துக் கொள்ளவே
ஆசைப்பட்டார்.
மூன்று மணிக்கு,
இயேசு
உரக்கக் கத்தினார்.
ஏலி, ஏலி, லெமா செபக்தானி
என் கடவுளே, என் கடவுளே
ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்
கீழே நின்ற
கூட்டத்தினருக்கு
வழக்கம் போலவே
விளக்கம் தெரியவில்லை.
ஏலியைக் கூப்பிடுகிறானா
என்று
ஏளனம் செய்தது.
மீண்டும் ஒருமுறை
உரக்கச் சொன்னார்.
எல்லாம் நிறைவேறிற்று
என்று
இறுதியாய் சொல்லி
உயிரை உடலிலிருந்து
விடுவித்தார்.
தனக்காய் வாழாத
தவறுக்காய்,
உருகித் தீர்ந்தது
ஓர் மெழுகுவர்த்தி.
வீதிகளில் வெளிச்சத்தை
நிரப்பிவிட்டு.
கருணைக் கடல்
அடங்கிய வினாடியில்
நகர் முழுதும்
அதிர்ச்சி அலை அடித்தது.
ஆலயத்தின் திரை
மேலிருந்து கீழ் வரை
இரண்டாய் கிழிந்தது.
நிலம் நடுங்கியது,
பாறைகள் வெடித்தன,
கல்லறைகள் பல திறந்தன.
இதுவரை இல்லாத
ஆச்சரியச் செயல்களால்
நகர் முழுதும் அதிர்ந்தது.
மனுமகனுக்கான
முன்னுரையை
வானம் சொன்னது
வால் நட்சத்திரத்து வடிவில்.
பணி வாழ்வின் முதல் படியையும்
வானமே தெரிவித்தது.
இறைமகனுக்காய்
வானத்துப் புறா ஒன்று
இறக்கை அடித்து
வாழ்த்துச் சொன்னது.
இப்போது
முடிவுரையையும் அதுவே
கருப்புப் போர்த்தி
அறிவித்துப் போகிறது
மேகங்கள் வழியாய் கசிந்து விட்டு.
No comments:
Post a Comment