Friday, August 3, 2018

உயிர்ப்பு உறுதிப்படுகிறது


எம்மானூஸ்,
செல்லும் வழியில்
சீடர் இருவரைச் சந்தித்து
உரையாடினார் இயேசு.

அவர்கள்
அவரை அறிந்ததும்,
ஆச்சரியமானார்கள்,
ஓர்
பிரபஞ்சப் பாக்கியம் பெற்றார்கள்.


இன்னும் சில சீடர்களுக்கு
இயேசு
காட்சியளித்தார்,
கலிலேய மலையிலும்,
திபேரியக் கடற்கரையிலும்.

மரணத்தின் ரணத்தை
தாண்டிய
மனுமகன்
திபேரியக் கடற்கரையில்
தோன்றினார்.

பேதுரு, தோமா, நத்தனியேல்
செபதேயுவின் மக்கள்
இன்னும் இரு சீடர்
என
கூட்டமான இடத்தில்
இயேசு தோன்றினார்.

சீடர்கள்
இரவு முழுதும்
வலைகளை வீசி
தண்ணீரை மட்டுமே
பிடித்துக் கொண்டிருந்தார்கள்
மீன்கள் எதுவும்
வலைகளுக்குள் வரவில்லை.

விடியற்காலையில்
இயேசு
கடற்கரையில் தோன்றினார்.

மனிதரைப் பிடிக்க
தான் தயாராக்கிய மனிதர்
மீன்களோடு போராடுவதைக்
கண்டார்.

வெற்று வலைகளோடு
தொற்றிக் கொண்டிராமல்,
இடப்பக்கமாய்
வலை வீசுங்கள் என்றார்.

வீசினர்,
அதுவரை
மீன்களில்லா பிரதேசமாய்
தோன்றிய இடம்,
இப்போது மீன் பண்ணையாய்
மாறி விட்டிருந்தது.

வலைகளால்
பழுவைத் தாங்க இயலவில்லை.

அப்போது தான்
உருவத்தை அவர்கள்
உற்றுப் பார்த்தனர்.
ஆண்டவனைக் கண்டு
ஆனந்தப் பட்டார்கள்.

இயேசு அவர்களோடு பேசினார்,

சீமோனை அழைத்து
“நீ என்னை நேசிக்கிறாயா ”
என வினவ,

ஆம் ஆண்டவரே
என்ற சீமோனிடம்
தயக்கம்
தங்கியிருக்கவில்லை.

என்
ஆடுகளை பேணி வளர்.
இயேசு பணித்தார்.

“என்னை அன்பு செய்கிறாயா
என் அன்புச் சீடனே”
மீண்டும் வினா
சீமோனைச் சந்தித்தது.

ஆம்
என்பதை அறிந்த
ஆண்டவர் நீரல்லவா ?

சீமோன்
சற்றே சங்கடப்பட்டுச்
சொன்னார்.

என்
ஆடுகளைக் கண்காணி

மூன்றாம் முறையாகவும்
அதே கேள்வி
இயேசுவிடமிருந்து எழ,

சீடரின் விழிகள்
உப்புக் கடற்கரையில்
கண்ணீர் விட்டன.

இயேசுவே
உம்மை நேசிக்கிறேன் என்பதை
அறிவீர் அல்லவா

என் ஆடுகளை
கவனமாய் காத்துக் கொள்.
இயேசு மூன்றாம் முறையாக
சொன்னார்.

மூன்று ஆணிகளில்
தொங்கிய இயேசு
மூன்று முறை சீமோனிடம்
உறுதிமொழி வாங்குகிறார்.

சீமோனை
அருளினால் நிரப்பி
நற்செய்தி பரப்பும் பணிக்காய்
தேர்ந்தெடுத்தார் இயேசு.

சீமோனே,
இளைஞனாய் இருந்தபோது
உனக்குத் தேவையானதை
நீ
செய்தாய்.

உன் பணிக்கால முடிவில்
உன் கைகள் விரிப்பாய்
யாரோ உன்னை
இழுத்துச் செல்வார்கள்.

இறுதி வரை
உறுதியில் நில்லுங்கள்.
உறுதி உடையும் நிலை
இறுதி எனக் கொள்ளுங்கள்.
என்றார்.

No comments:

Post a Comment