சிலுவை.
சிலுவை.
ஓர் அவமானச் சின்னம்.
இயேசுவின் குருதி தான்
அதை
புனிதமானதாய்
புதுப்பித்தது.
சிலுவை,
இரு மரச்சட்டங்கள் இணைந்த
கொலைக் கருவி,
இயேசுவின் இரத்தம் தான்
அதை
இதய இணைப்பின் கருவியாய்
நிறம் மாற்றி நீட்டியது.
சிலுவை,
இயேசுவின் சிரம் தொடும் வரை
வெறும் மரம்,
பிறகே அது
வரமாய் உருமாறியது.
சிலுவை,
தாழ்த்தப்பட்ட சின்னம்
இயேசு
உயர்த்தப் படும் வரை.
ஓர் வலியின் சின்னமாய்
ஒலித்துக் கொண்டிருந்த
சிலுவைக் குரல்கள்,
ஒளியின் மின்னலாய்
மிளிரத்துவங்கின அந்த
மயான மத்தியானம் முதல்.
சில புனிதச் சின்னங்கள்
அவமானச் சின்னமாக
அவதாரம் எடுப்பதுண்டு.
யூதாஸின் கபடம் கலந்த
முத்தத்தைப் போல.
சில
அவமானச் சின்னங்கள்
வாழ்வின் சின்னங்களாக
விஸ்வரூபம் எடுப்பதும் உண்டு
இயேசுவைச் சுமந்த
சிலுவையைப் போல.

கொலை கொம்பாய் இருந்த
சிலுவை,
தன் ஜென்ம பாவங்களைக் கழுவி
கொழு கொம்பாய் மாறியது.
சிலுவை
இனி சாவின் சின்னமல்ல,
ஓர்
சாவு அதை
வாழ்வின் சின்னமாய்
வழிமொழிந்து சென்றது.
No comments:
Post a Comment