Friday, August 3, 2018

பாவமில்லையேல் கல் எறி


ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

No comments:

Post a Comment