Friday, August 3, 2018

வருந்திய திருடன், திருந்துகிறான்

இயேசுவைத்
திருடனாய்ச் சித்தரிக்க
அவர் சிலுவையில்
இருபுறமும்
கள்வர் இருவர்
சிலுவைகளில் தொங்கினர்.

அவர்களில் ஒருவன்
சாவின் விளிம்பிலும்
ஆண்டவனைப் பழித்தான்,

நீ
ஆண்டவன் தானே
காயத்திலிருந்து எங்களைக்
காப்பாற்றேன், என்றான்.

மற்றவனோ,
அவனைக் கடிந்து கொண்டு
நாம்
தவறுகளுக்காய்
சிலுவையில் தொங்குகிறோம்,
அவரோ
தவறியும் தவறிழைக்காதவர்.

நம் சாவு
நீதி வாழ்வதன் அடையாளம்
அவர் சாவு
நீதி செத்ததன் சாட்சி.
என்றான்.

ஆண்டவரே
உம் விண்ணக வாழ்வில்
என்னையும் ஏற்றுக் கொள்ளும்
என
விண்ணப்பமும் வைத்தான்.

இயேசு அவனிடம்,
இன்றே நீ என்னோடு
வான் வீட்டில் இருப்பாய்
என்றார்.

தற்கொலை முனையில்
வழுக்கியவனுக்கு
மீண்டும் ஆயுள் அளிக்கப் பட்டதாய்,
சாவுக்கு முந்தைய
நிமிடத்தில்
அவன் நம்பிக்கைக்கு
வாழ்வு வழங்கப் பட்டது.

இயேசு
வேதனையின் வெடிப்புகளிலும்
தன்னை
சிலுவையில் அறைந்தவர்களின்
மன்னிப்புக்காய் மன்றாடினார்.

எதிரியை நேசிப்பதை
மலை மேலிருந்து
பேசியதோடு நின்று விடாமல்
சிலுவை மேலும்
போதித்தார்.

“தந்தையே இவர்களை மன்னியும்”
இவர்கள்
அறியாமல் தவறிழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment