Friday, August 3, 2018

நான் யார் அறிவீர்களா ?



நான் யாரென்று
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒரு பொழுதில்
இயேசு வினவினார்.

போதகர் என்கிறார்கள்
பலர்,
தீர்க்கத்தரிசி என்கிறார்கள்
சிலர்
சொன்னார்கள் சீடர்கள்.

நீங்கள் ?
கேள்வி பிறந்தது இயேசுவிடமிருந்து.

நீர் மெசியா,
கடவுளின் மகன்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விடைசொன்னார் சீமோன்.

இயேசு அகமகிழ்ந்தார்
அவரை
ஆரத் தழுவினார்.

சீமோனே,
உன்னில்
நான் பெருமை கொள்கிறேன்,
உன் விசுவாசத்தின் விழுதுகளில்
என்
திருச்சபையைக் கட்டுவேன்.

உன் பெயர் இனிமேல்
பாறை.
உன்மேல் கட்டப்படுபவை
அஸ்திவாரம் இல்லாமல்
அழிக்கப்படமாட்டாது.

வானகத்தின்
திறவுகோல்கள் இனிமேல்
உன் விரல்களுக்கு
வழங்கப்படும்.

நீ,
மண்ணகத்தில் கட்டுபவை
விண்ணகத்தில் உனக்காய்
கட்டப்படும்.

இங்கே நீ
அவிழ்ப்பவை எல்லாம்
விண்ணகத்திலும் அவிழ்க்கப்படும்.

இயேசுவின் வலிமை வார்த்தைகள்
சீமோனுக்கு அளிக்கப்பட்டது.
திருச்சபையின்
வாசல் திறக்கும் வல்லமை
சீமோனுக்கு இங்ஙனம்
சொந்தமானது.

No comments:

Post a Comment