ஒருவன்
அத்திமரம் ஒன்றை நட்டு
பத்திரமாய் வளர்த்தான்.
அது
வேர்விட்டுக் கிளைவிட்டு
வளர்ந்தாலும்,
கனிவிட மட்டும் மறுத்தது.
கனிகள் தராத மரங்கள்
விருதுக்கானவையல்ல
வெறும்
விறகுக்கானவையே.
தலைவன்
மூன்று ஆண்டுகள்
முயன்றான்.
முடியவில்லை,
கனிகளைப் பெறும் வழியும் புரியவில்லை.
தண்ணீர் இல்லாத ஏரி போல
யாருக்கும்
பயனே இல்லாமல் கிடக்கும்
மரத்துப் போன
மரத்தின் மீது வெறுப்பு கொண்டான்.
வேலையாளை
அழைத்தான்,
வெட்டி விடு இதை
கனிதராத இந்த மரம்
மண்ணின் வளத்தை விழுங்கி
ஏமாற்றத்தைக் காய்க்கிறது.
பறவைகளின் பட்டினிக்கும்
இதனிடம் பழமில்லை,
உரிமையாளனின் தேவைகளும்
எந்தக் கிளையிலும்
முளைவிடவில்லை.
வேண்டாம் இது என்றான்.
வேலையாளோ,
தலைவரே,
இன்னும் ஓராண்டு போகட்டும்.
நிலத்தை இன்னும்
பதப்படுத்துவேன்,
வேருக்கு
எருவைத் தருவேன்.
ஒருவேளை
மண்ணின் மாற்றங்கள்
கிளையில் பூக்களை வரவைக்கலாம்
பூவில் கனியைத் தரவைக்கலாம்.
மாற்றங்களும்
ஏதும் மாற்றம் தராவிடில்,
அழித்திடலாம் என்றான்.
தலைவன்
கனிக்காய் காத்திருக்கிறான்,
வேலையாள்
தன் பணியை பழுதின்றிச் செய்கிறான்.
கனி தராதவர்க்கு
அக்கினி தரப்படும்.
மனிதனின் பணியை
மரத்தோடு ஒப்பிட்டுப் பேசி
மனிதரின்
சிரங்களுக்குப் புரியவைத்தார்
இயேசு.
எருசலேமே,
எருசலேமே.
கற்களோடு நற்செயல்களை
எதிர்கொள்ளும்
பதற்களே.
எத்தனையோ முறை
ஏங்கினேன்,
குஞ்சுகளாய் உங்களை
சிறகின் கீழ் மூடினேன்,
நீங்களோ
சிறகைத் தாண்டி வெளிவந்து
பருந்துக்கு
பந்தியாகிக் கொண்டிருக்கிறீர்கள்.
சொல் கொண்டு வரும்
இறைவாக்கினர்களை
கல்கொண்டு கொல்கிறீர்கள்.
மருந்தை அருந்துங்கள்
இல்லையேல்
நோய்க்கு விருந்தாவீர்கள்.
என்றார்.
No comments:
Post a Comment