இயேசுவின் உடல்
கல்லறைக்குள்
அடைக்கப்பட்ட
மூன்றாம் நாள் வந்தது.
உயிர்ப்பேன் என்று
இயேசு
உரைத்திருந்த
மூன்றாவது நாள் வந்தது.
காவலர்கள்
கவனம் கூட்டினார்கள்
ஆர்வலர்கள்
புலன்கள் தீட்டினார்கள்.
திடீரென
பெரிய நடுக்கம் நடந்தது.
மலைகளின் தலைகளிலிருந்து
கற்கள்
புரண்டோ டின.

பிணியாளிகள் பலரின்
அகம்
சுகமானது.
வானத்திலிருந்து
ஓர்
பேரொளி பாய்ந்தது.
அது
கல்லறைக் கதவுகளை
சொல்லாமல் திறந்தது.
காவலர்கள்
கண்மைக்காமல் வியந்தனர்.
உயிரின் ஆழம் வரை பயந்தனர்.
இதோ,
ஆச்சரியங்கள் எல்லாம்
விழிகளை அகலத் திறக்க,
இயேசு
உயிர்த்துவிட்டார்.
மரணத்தின் மதில் சுவரால்
தனியாக்கப் பட்ட
உடலும் உயிரும்
உயிர்ப்பின் கதவால் ஒன்றாயின.
இது,
உடல் உயிர்கொண்ட
சம்பவமல்ல,
மனுமகன் மகிமை கண்ட
சம்பவம்.
கிறிஸ்தவத்தின் மையம்,
மனுமகனின் உயிர்ப்பு.
இதோ
எல்லோருக்கும் முடிவுரையாகும்
கல்லறை,
கிறிஸ்தவத்துக்கு முன்னுரையாகிறது.
எல்லோருக்கும்
அவமானச் சின்னமாயும்,
வெறுப்பின் விளக்கமாகவும் இருந்த
சிலுவை,
கிறிஸ்தவத்தின்
அடையாளமாகிறது.
இயேசு,
உயிர்த்து விட்டார்.
நீதியின் சாவு நிரந்தரமல்ல
என்பது
நிரூபிக்கப் பட்டது.
ஆணிகளுக்குள் அறையப்பட்ட
இயேசுவோடு
மறைந்தன முன் பாவங்கள்.
உயர்த்தப்பட்ட மனுமகனோடு
உயிர்த்தெழவேண்டும்
நற்செயல் நாற்றுகள்.
No comments:
Post a Comment