Friday, August 3, 2018

ஆணிகளுக்குள் ஆகாயம்


பயணம்
கொல்கொதா என்றழைக்கப்பட்ட
மலைக்கு வந்தது.

கொல்கொதா என்றால்
மண்டையோடு
என்பது பொருள்.

தன்
கொலைக்கருவியை
தானே தூக்கி வரும் வலிமை
அவருக்கு இருந்தது.

சிலுவை
தரையில் போடப்பட்டது.
இயேசு
சாவுக்குத் தயாரானார்.

படைவீரர்கள்
இயேசுவை
சிலுவையில் கிடத்தினர்.

நீளமான ஆணி ஒன்று
வலது
உள்ளங்கையை துளைத்தது.
இன்னொன்று
இடது கையைக் குடைந்தது.

உள்ளங்களை தேடி நடந்த
இயேசு
உள்ளங்கையில் குருதி
வெள்ளம் பாய சிலுவையில் கிடந்தார்.

கால்கள் இரண்டும்
சேர்த்து,
மூன்றாவது ஆணி அறையப்பட்டது.

இயேசு கதறவில்லை.
சிந்தை சிதறவில்லை.
வேதனையை உண்டார்.

வலியின் விஸ்வரூபம்
வாழ்வுக்கு
வழங்கப்பட்டது.

பூ பூத்த குற்றத்துக்காய்
பூச் செடிக்கு
தீச் சூளை பரிசு.

பாதைகளைச் செதுக்கியதற்காய்
பாதங்களுக்கு
மரண தண்டனை.

சுட்டது என்பதற்காய்
சூரியனுக்குச்
சிறைச்சாலை.

சிலுவை மரம் பின்னர்
நேராக நிறுத்தப்பட்டது.
இயேசுவின் கரங்களும் கால்களும்
உயிரோடு சேர்ந்து
கசிந்தன.

No comments:

Post a Comment