அரசனுக்குப் பயந்து
தனிமை அறையில்
தாழிட்டுக் கிடந்த தன்
அப்போஸ்தலர்களை சந்தித்தார்
இயேசு
அவர்கள்,
ஆளும் அரசாங்கத்தின்
தண்டனைக்குத் தப்ப
வெளிச்சத்தையே வடிகட்டும்
தாழ்ப்பாளுக்குள்
ஒளிந்து கிடந்தார்கள்.
கதவுகள் காற்றையும்
தடைசெய்யும் இறுக்கத்தில்
அடைக்கப்பட்டிருக்க,
இயேசு
அவர்கள் முன்னால்
ஒளிச் சிற்பமாய் நின்றார்.
உங்களுக்குச் சமாதானம்
என்றார்.
சீடர்களின் நரம்புகளுக்குள்
அத்தனை அணுக்களும்
சுத்தமாயின,
பயத்தின் பற்கள் பிடுங்கப்பட்டன,
தைரியத்தின் கால்கள்
திடீரென முளைத்தன.
சீடர்கள் மகிழ்ந்தனர்,
தங்கள் இயேசு
சாதாரண மனிதனல்ல,
மரணம் வந்து முத்தமிட்டதும்
சுவடு தெரியாமல்
சிதைந்து போகவில்லை !
சாவு
எல்லோருடைய சரித்திரத்தையும்
முடித்து வைக்கிறது,
இயேசுவுக்கு அது
ஆரம்பித்து வைக்கிறது.
என்று அகமகிழ்ந்தனர்.
இயேசு அவர்களிடம்,
செல்லுங்கள்
உண்மையின் வார்த்தைகளை
உலகுக்கு சொல்லுங்கள்,
நற்செய்தி அறிவித்தலை
ஆரம்பமாக்குங்கள்.
என்றார்.
தோமையார் மட்டும்
அன்று
அவர்களோடு இல்லை.
தோமையார் விசுவாசத்தில்
ஆமையானார்.
விரைவான விசுவாசம்
அவரிடம் இல்லை.
குறைந்த விசுவாசத்தால்
குறுகினார்.
சந்தேகத்தின்
சொந்தக்காரர் அவர்.
சீடர்கள் சொன்னதையும்
நம்பாமல் பார்த்தார்.
என் கண்கள் அவரைக் கண்டு
அவர்
ஆணிக் காயங்களை
என் விரல்கள்
ஆழம் பார்த்து,
அவர்
விலாக் காயத்தை என் கைகள்
ஆழம் பார்த்தால் மட்டுமே,
எனக்குள்
நம்பிக்கை பூக்கும்,
அப்போது தான் ஆசுவாசமாவேன்
தப்பாமல் நான்
விசுவாசம் வளர்ப்பேன் என்றார்.
இயேசு
பிறிதொரு நாள்,
பன்னிருவருக்கும் காட்சியளித்தார்.
தோமையாரும் இருந்தார்.
இயேசு தோமையாரை அழைத்தார்
வா,
வந்து என் கைகளின் காயங்களில்
உன் விரல்களால் தொடு.
என்
விலாவின் காயத்துள்
கைகளை இடு.
நம்பு…
அது தான் பணிவாழ்வுக்குத் தெம்பு.
என் காயங்களை தழுவு
மனச் சாயங்களைக் கழுவு
என்றார்
தோமையார் நம்பினார்,
என் ஆண்டவரே,
என் தேவனே என்று
உற்சாகக் குரலெடுத்தார்.
இயேசு
மென்மையாய் பதிலளித்தார்,
உன் கண்கள் சொன்னதால்
நம்பினவன் நீ,
இதயம் சொல்வதை
நம்புபவன் இன்னும் பாக்கியவான்.
கண்டதால் நீ விசுவசித்தாய்
காணாமல் விசுவசிப்பவன்
இன்னும் பாக்கியவான்.
No comments:
Post a Comment