Friday, August 3, 2018

எனக்காக அழவேண்டாம்


இயேசு-வின்
சிலுவைச் சாலையின் இருபுறமும்,
வேடிக்கை பார்க்கும்
வாடிக்கை மனிதர் கூடினர்.

மெல்லிய மனம் கொண்ட
மங்கையர் சிலர்
ஒப்பாரி வைத்தனர்.

தங்கள் சுமைகளை
தாங்கியவர்
சிலுவைச் சுமையை
ஏந்திச் செல்லும் கவலை
அவர்களுக்கு.

தங்கள் நோய்களை
நீக்கியவர்
தன்னை மரணத்துக்கு
உயிலெழுதிய வலி
அவர்களுக்கு.

இயேசு அவர்களிடம்,
எனக்காக அழுதது போதும்
உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும்
அழ ஆரம்பியுங்கள்.

பச்சை மரத்தையே
எரிக்கிறார்கள் எனில்,
பட்ட மரம் மட்டும்
எரிவதை தவிர்க்குமா ?
என்றார்.

சிலுவை
தோளில் அழுத்த,
படைவீரர்கள் கேலியால் அமிழ்த்த

தன்
மனித அவதாரத்தை
உறுதிப் படுத்தும் விதமாய்
இயேசு
தடுமாறி விழுந்தார்.

மலையொன்று சரிந்து
மலர் மீது விழுந்ததாய்
சிலுவை
விழுந்தவரை அழுத்தியது.

எழுந்தார் இயேசு.
அவர்
எழுவதற்காகவே விழுந்தவர்
விழுந்தவர்கள் எழுவதற்காகவே
வாழ்ந்தவர்.

பயணம் தொடர
கால்கள் இடற
மீண்டும் விழுந்தார் இயேசு.

தடுமாறினாலும்
தடம் மாறாமல்
மீண்டும் பயணம் தொடர்ந்தார்.

மூவொரு தேவன்
தந்தை
மகன்
தூய ஆவியாய் உறைந்தவர்,

மூன்றாவது முறையாய்
மீண்டும் விழுகிறார்.

ஒரு முறை விழுந்தாலே
தாவியோடும்
தாயன்பு கொண்டவர்
விழுந்து விழுந்து நடந்தாலும்
உதவிக் கரங்கள் வரவில்லை.

மலைக்குச் செல்லும் முன்
இறைவன்
இறந்துவிடுவாரோ
என்னும் பயம் படைவீரர்களுக்கு.

அவர்கள் கண்ணுக்கு
சக்திமானாய் தெரிந்தார்
சீரேனே ஊரைச் சேர்ந்த
சீமோன்.

சீமோன்
சிலுவையைச் சுமக்க
இயேசுவுக்கு உதவினார்.

உலக வரலாற்றின்
உதடுகளால்
உச்சரிக்கப்படும் பாக்கியம்
பெற்றார்.

No comments:

Post a Comment