வலியின் விளைநிலம்
தீர்ப்பிடாதீர்கள்
என்று போதித்த இயேசு
சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார்.
சாட்டை நுனிகள்
மாட்டை அடிப்பது போல்
மனுககனை அடித்தன.
சங்கிலிகள் பிணைக்கப்பட்டு
அகப்பட்ட
ஆயுதங்களெல்லாம்
மேனியெங்கும்
வீரியத்துடன் பாய்ந்தன.
ஒருகன்னத்தில் அறைந்தவருக்கு
மொத்த உடலையும்
மறுப்பின்றி வழங்கினார்
இயேசு.
வலிகளின் விளைநிலமானது
மெய்யானவரின்
மெய்.
ஏளனப் பேச்சுகள்
அவருடைய உள்ளத்தையும்
ஆயுதப் பேச்சுகள்
அவருடைய உடலையும்
கிழித்துக் கொண்டே இருந்தன.
இரத்த நாளங்கள்
உடலுக்கு வெளியே ஓடுவதாய்
உடைபட்ட இரத்தம்
சொன்னது.
இயேசுவின் ஆடைகள்
அவிழ்க்கப்பட்டன
அவமானம்
அவருக்கு அளிக்கப்பட்டது.
வானம் தந்தவருக்கு
செந் நிறப் போர்வை ஒன்று
மானம் மறைக்க
போர்த்தப்பட்டது.
பூவின் தலைக்கு
முட்கிரீடம் ஒன்று மாட்டப்பட்டது.
முட்களின் முனை பாய்ந்து
குருதியின் பாசனம்
விழிகளில் வழிந்தது.
ஆடையின் சிவப்பும்,
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாய் வெளிக்காட்டியது.
ஏளனப் பார்வைகள்
இயேசுவைத் தைத்தன.
கேலியின் குரல்கள் காதுகளை
பிய்த்தன.
வலியின் மீது இயேசு
வலிய நின்றார்.
பரமன் தோள்களில்
பாரச் சிலுவை ஒன்று
சாய்க்கப்பட்டது.
பலிபீடம் சுமந்து
செல்லும் ஓர் செம்மறியாடாய்
சிலுவையுடன்
பரமனின் பாதங்கள்
கற்களை மிதித்தன.
கல்வாரி மலை
பரமனின் பாதம் பட்டுப்
புனிதமடையக்
காத்திருந்தது.
No comments:
Post a Comment