Friday, August 3, 2018

வாழ்வுக்கு மரண தண்டனை



இயேசுவை விடுவிக்கும்
வாய்ப்புக்காய்
மூளை கசக்கிய பிலாத்துவுக்கி
முளைவிட்டது
அந்த யோசனை.

பாஸ்கா நாளில்
கைதி ஒருவரை
கருணை அடிப்படையில்
விடுவிக்கும் வழக்கம்
தொடர்கிறதே.

இயேசுவை
வழக்கிலிருந்து விடுவிக்க
அந்த
வழக்கத்தையே
வழியாகக் கொள்ளலாமே !

பிலாத்து சிந்தனையை
ஆழப்படுத்தினான்.

இரண்டு கைதிகளில்
ஒருவரை விடுவிப்பதே வழக்கம்
ஒருவர் இயேசுவெனில்
இன்னொருவர்
மக்களின் ஏகோபித்த
வெறுப்பைப் பெற்றவனாய் தான்
இருக்க வேண்டும்.

பரபாஸ் !

பிலாத்துவுக்குள்
வந்தது அந்த பெயர்.

பரபாஸ்,
கலகக் காரன் என்று
சகலராலும் சபிக்கப்பட்டவன்.

அவனை விடுவிக்க
கூடியிருக்கும் கூட்டம்
தூசித் துளியளவும்
ஆசைப்படாதென்பது
பிலாத்துவின் எண்ணம்.

இயேசுவும் பரபாசும்
கூட்டத்தினரின் முன்னால்
நிறுத்தப்பட்டனர்.

இரு துருவங்கள்
அருகருகே நின்ற
அதிசயம் அது.

மன சலவைக்காரனும்
வன் கலகக் காரனும்
முன்னால் நின்றார்கள்.

பிலாத்து
எதிர்பார்ப்பு பொதிந்த
கேள்வியைக் கேட்டான்.

இருவரில் ஒருவர்
விடுவிக்கப் படுவார்.
யார் வேண்டும் என்பது
உங்கள்
தெரிவின் உரிமை.

யார் வேண்டும் ?
பரபாஸா ? இயேசுவா ?

வினாடி நேரம் நிலவிய
மெளனத்தை
இயேசுவின் எதிர்ப்பாளர்கள்
உடைத்தார்கள்.

பரபாஸ் போதும் எங்களுக்கு.

கூட்டத்தினர்
முன்வந்த குரலைப்
பின் தொடர்ந்தனர்.
பரபாசை விடுதலை செய்யுங்கள்.

பிலாத்து
இருந்த வாசலும்
இறுக அடைக்கப்பட்டதில்
திகைத்தான்.

இயேசு ?

இயேசு இறக்கட்டும்
கூட்டத்தின் குரல்கள்
விட்டத்தை எட்டின.

யார் வாழ வேண்டும் என்று
உயிர் தேய உழைத்தாரோ,
அந்த கூட்டம்
இன்று சாவுக்கு சம்மதிக்கிறது.

நிழல் தந்த பெரிய மரம்
வேர்களுக்குள்
வேதனை பாய்ந்து நிற்கிறது.

இயேசுவை நான்
என்ன செய்யட்டும் என்றான்
பிலாத்து.

சிலுவைச் சாவே
அவனுக்குத் தேவை.
கத்தியது கூட்டம்.

சாவுக்குரிய குற்றமொன்றும்
இயேசுவிடம் இல்லை
சாவுக்கு இவனை
சம்மதிக்க முடியாது.

இவன் தீங்கு என்ன ?
பிலாத்துவின் கேள்விகள்
கூச்சலில் மடிந்தன.

சாவு வழங்கு,
அதுவே வழக்கு.

இயேசுக்கு ஆதரவானால்
நீர்
பேரரருக்கு எதிராவீர்
மிரட்டியது கூட்டம்.

கலகத்திற்கு
பயந்த பிலாத்து
இறைமகனை
இறக்க விட சம்மதித்தான்.

இவன் இரத்தத்தின் மீது
நான் குற்றமற்றவன்,
இனி உங்கள் பாடு
என்று
கைகழுவி நழுவிச் சென்றான்.

பரபாஸுக்கு
விடுதலையும்,
விடுதலை நாயகனுக்கு
சிலுவைச் சாவும் தீர்ப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment