இயேசு,
பிலாத்துவின் அரண்மனைக்கு
பழிவாங்க
அழைத்துச் செல்லப்பட்டார்
செய்திகள் கேள்விப்பட்ட
யூதாஸ் வருந்தினான்.
இயேசு
தண்டனைகளிலிருந்து
தப்பிவிடுவார் என்ற கணக்கு
தப்பாகிவிட்டதில் கலங்கினார்.
சூரியனை உருக்கி
குடுவையில் கொட்டுவது
இயலாதென்றே
இறுமாந்திருந்தான் அவன்.
பலமுறை இயேசு
சதிகாரர்களின் சதி வளையத்தை
எளிதாக
வளைத்தெறிந்திருக்கிறார்.
பிடிக்க வந்தவர்களிடமிருந்து
மாயமாய்
மறைந்திருக்கிறார்.
அப்போதெல்லாம்
இயேசுவின் வேளை வரவில்லை
இப்போது
வந்ததென்பதை
யூதாசின் மனம் அறியவில்லை.
மாசற்ற இரத்தத்தை
மாட்டி விட்டேன்
முத்தத்தின் ஈரத்தால்
காட்டி விட்டேன்.
வெள்ளை மனிதனை
வெள்ளிக் காசுக்காய்
விற்று விட்டேன்.
கதறிய யூதாஸ்
குருக்களிடம் போய்
கையேந்தினான்.
விட்டு விடுங்கள்.
இயேசு
கடவுளின் மனிதன்
மனிதனின் கடவுள்.
வெள்ளிக் காசுகள் இதோ
இந்த
சுருக்குப் பையில் இருக்கின்றன.
பெற்றுக் கொள்ளுங்கள்
அவரை
விட்டுத் தாருங்கள்.
முட்டையை விட்டு
வெளிவந்த பறவை
மீண்டும்
முட்டைக்குள் போவது
சாத்தியமில்லையே.
யூதாசின் விண்ணப்பமும்
நிராகரிக்கப் பட்டது.
யூதாஸ்
கையிலிருந்த காசை
ஆலயத்தில் விட்டெறிந்தான்.
இயேசுவே மன்னியும் என
இதயம் கதறினான்.
வெள்ளிக் காசுகள்
ஆலயமெங்கும் அனாதையாய்
ஓட,
சுருக்குப் பை
பாவத்தின் அடையாளமாய்
சுருங்கிக் கிடக்க,
யூதாஸ்
சுருக்குக் கயிற்றில்
ஜீவன் சுருக்கினான்.
இயேசு,
பிலாத்துவின் முன்
பிணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டார்.
நீ,
யூதனின் அரசனா ?
கிரீடம் சூட்டிய பிலாத்து
கைதிக் கோலத்தில் நின்றிருந்த
இயேசுவிடம்
ஏளனக் கேள்வியை எறிந்தான்.
அரசன் என்பது
நீர் சொல்லும் வார்த்தை.
என் பணி
கிரீடத்துக்குள் தலை கொள்வதல்ல
உண்மைக்குள் நிலை கொள்வது.
உண்மைக்குச் சான்று
பகர வந்தவன் நான்
பகர்ந்து விட்டேன்
பகிர்ந்து விட்டேன்.
பிலாத்து நெற்றி சுருக்கினான்
உண்மையா ?
அது என்ன என்று
வினவினான்.
பொய்களின் புகலிடங்களில்
உண்மை உறைவதில்லை,
வெளிச்சக் குதிரைகள்
வெளியேறிப் போனபின்
இருட்டுக் கொட்டகைக்குள்
தெளிவு தங்குவதில்லை.
இயேசு
பிலாத்துவுக்குப் பதில் சொல்லவில்லை.
உனக்கு எதிராய்
குற்றச் சாட்டுகள்
குவிகின்றன,
உன் பதில்
உடனே சொல்.
பிலாத்து கட்டளையிட்டான்.
இயேசுவோ,
தப்பிக்கும் பதில்களில்
தலைவைக்கவில்லை.
மெளனத்தின் மீதே மீண்டும்
மனம் வைத்துக் கிடந்தார்.
பிலாத்து திகைத்தான்.
மன்னனின் முன்னால்
மெளனத்தின் முடியவிழ்க்காத
இயேசுவின் நிலை கண்டு
நிலை குலைந்தான்.
தன் முன்னால்
மன்னிப்பு மடியவிழ்க்காத
இயேசுவின் உறுதியில்
பயந்தான்.
உன்னை விடுவிப்பதோ
மரணத்துள் இடுவிப்பதோ
என்
ஆணையில் அடங்கியிருக்கிறது
பேசு
பிலாத்து கர்ஜித்தான்.
இயேசு நிமிர்ந்தார்.
விண்ணகத்திலிருந்து
வழங்கப்படாதிருந்தால்
உனக்கு
என்மீது
எள்ளளவும் அதிகாரமில்லை.
பிலாத்துவின் மனைவி
பிலாத்துவை
ரகசியமாய் அழைத்து
காது கடித்தாள்.
அவர் மனைவிக்கு
இயேசுவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்
பொறாமையின் பிள்ளைகள்,
உண்மையின் வாரிசுகளல்ல
என்பது விளங்கியே இருந்தது.
எப்படியேனும்
இயேசுவை விடுவியுங்கள்,
பாவத்தின் துளிகளால்
நம்
கரங்களைக் கறையாக்க வேண்டாம்
என
பிலாத்துவிடம் பரிந்துரைத்தாள்.
பிலாத்து
சிந்தித்தான்.
வெறிநாய்களிடையே வீசப்பட்ட
வெள்ளாட்டை
எப்படித் தப்புவிப்பது ?
No comments:
Post a Comment