சதுசேயர் சிலர்
சதிக்கேள்வி கேட்டனர்,
இயேசுவை வார்த்தை வலையில்
வீழ்த்த எண்ணி.
ஒருத்தி மணமாகி
மகப்பேறுக்கு முன்பே
கணவன் மரணமடந்தால்
அவன் சகோதரன்
அவளைக்
கைப்பிடித்தல் மோயிசன் சட்டம்.
ஒருத்தி,
ஏழு சகோதரரை
ஒருவர் பின் ஒருவராய் மணந்து
எழுவரையும் இழக்கிறாள்.
பின்
உயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி ?
அசத்தல் கேள்வியைக்
கேட்டதாய்
ஆனந்தத்தை
அசை போட்டது கூட்டம்.
இயேசு சொன்னார்,
சின்ன விசுவாசக் காரர்களே,
வேடதாரிகளே கேளுங்கள்.
உங்கள் அறியாமைக் கண்கள்
மூட மறுக்கின்றன,
வெளிச்சம் உங்கள்
ஊனக்கண்ணுக்கு உள்ளே வர
மறுக்கிறது.
விண்ணரசு,
சமகால வாழ்வின் நகல் அல்ல,
அங்கே
பெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.
எல்லோரும்
தேவதூதப் பிறவிகளே.
அசை போட்ட கூட்டம்
வசை கேட்டு விலகியது.
No comments:
Post a Comment