உயிர்த்த இயேசு
சீடரின்
உள்ளங்களில் உலாவினார்,
தூய்மையான
கருத்துக்களால் துழாவினார்.
இறந்த நாட்களின்
அனுபவப் பாடங்களில்
அலைக்கழிக்கப்பட்ட சீடர்கள்,
உயிர்ப்பின் உவகையின்
உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்களின் மத்தியில்
ஆண்டவர்
உறுதியான செய்திகளை
இறுதியாய் சொன்னர்.
எத்தனை அருவிகள்
கலந்தாலும்
கடல் ஒன்று தான்.
எத்தனை நாசிகள்
நுகர்ந்தாலும்
காற்று ஒன்று தான்.
எத்தனை மேகங்கள்
நகர்ந்தாலும்
வானம் ஒன்று தான்.
செல்லுங்கள்,
உயிருள்ள போதனைகளை
உடுத்திக் கொள்ளுங்கள்,
செத்த போதனைகளின்
சுடுகாட்டுச் சந்ததியினரை
பூத்திருக்கும்
புது போதனையால் கழுவுங்கள்.
உலகெங்கும்
நற்செய்தியை நம்புவோன்
பாக்கியவான்.
அவன்,
நோயுற்ற உடலிலிருந்து
நோயை பிரித்தெறிவான்,
நச்சுப் பாம்பையும்
புன்சிரிப்போடு பிடித்தெறிவான்,
பேய்களை
வன்மையாய் அறுத்தெறிவான்,
கடைசிவரை
என்னுடைய அருள் பெறுவான்.
நற்செய்தி அறிவியுங்கள்,
உண்மையின்
உலைக்களத்தை மக்களுக்கு
அறிமுகம் செய்யுங்கள்,
தீமையின்
கொலைக்களத்திலிருந்து
அவர்களை பறிமுதல் செய்யுங்கள்.
சட்டங்களின்
பாம்புத்தோலுக்குள்
பதுங்கிக் கிடக்கும்
கட்டுவிரியன்களை கண்டறியுங்கள்,
அவர்களின்
விஷப் பற்களை
போதனைகளால் பிடுங்குங்கள்.
என் போதனைகள்
ஆணிகள் அறையும்
அச்சுறுத்தல் போதனைகள் அல்ல,
நம்
தீர்ப்பிடல் கொலைக்களத்திலும் அல்ல.
அன்பே நம் தீர்ப்பு
அன்பே அனைத்திற்கும் தீர்வு.
உங்களுக்கு
என் வல்லமையின் ஆடைகளை
வழங்குகிறேன்,
மனங்களில் என்
கருத்துக்களை இருத்துங்கள்
மனிதர்களை
என் இருக்கைக்கு அனுப்புங்கள்.
சொன்னபின்,
இதோ…
சீடர்களின் கண்கள் சிலிர்க்க
உயிரோடு விண்ணுலகம்
சென்றார் இயேசு.
அங்கே
தந்தையின் அரியாசனம் அருகே
மீட்பின் மகன் அமர்ந்தார்.
இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள்
இதயத்தால் தெளிவு பெற்றார்கள்.
காட்சிகள் கண்டவர்கள்
சாட்சிகள் ஆனார்கள்,
போதனைகளைப் பரப்பும்
பாதங்கள் பெற்றார்கள்.
விதையின் முடிவு
செடியின் விடிவு.
இயேசு,
மரணத்திற்கு மறுப்பெழுதியவர்.
உயிர்ப்புக்கு உரையெழுதியவர்.
அந்த சிலுவை மரம்
ஓரு சகாப்தத்தின் முதலெழுத்தானது,
கிறிஸ்துவின் உயிர்ப்பு
கிறிஸ்தவ மதத்துக்கு உதயமானது.
No comments:
Post a Comment