கதிரவன்
கடலில் குளித்துக் கரையேறி
காலைப் பயணம் துவங்கிய போது
மதலேன் மரியாளும்,
இயேசுவின் தாயாரும்
கல்லறை நோக்கி வந்தனர்.
பகலவன் உதித்த செய்தி
அறிந்த அவர்கள்
பரமன்
உயிர்த்த செய்தியை
அறிந்திருக்கவில்லை.
இதோ,
கல்லறைக் கதவு திறந்திருக்கிறது !
நம்பமுடியா கண்கள்
இமைகளை இயக்க மறுத்து,
உதடுகள்
ஒன்றையொன்று
தொட்டுக் கொள்ள தயங்கி,
ஆச்சரியம் உள்ளுக்குள்
நீர் சரிக்க வியந்தனர்.
ஓடினர்,
உள்ளே
மரணத்தின் கட்டிலில்
காற்று மட்டுமே கெட்டியாய்
கிடந்தது.
இயேசு இல்லை.
கல்லறைக் கதவருகே
ஓர்
தேவ தூதர்.
சந்தோஷச் சிறகுகளை
சுமந்திருந்தார்.
வந்தவர்களின் வினாக்களுக்கு
பரவசப் பதிலை
பகிர்ந்தளித்தார்.
இயேசுவைத் தேடுகிறீர்களா ?
அவர்
உயிர்த்து விட்டார்.
மண்ணுலகப் பணியை
முடித்துவிட்டார்.
வாடாதீர்கள்
தேடாதீர்கள்.
புன்னகையோடு
தூதன் சொல்ல,
இருவரும் இதயத்தில்
பெருமிதம் கொண்டார்கள்.
வான தூதன் விலக,
சற்று நேர மெளனமும் கண்ணீரும்
இருவரையும்
இறுக்கிக் கட்டியது.
அப்போது
அவர்கள் முன்
இயேசு தோன்றினார்.
இருவரும்
மகிழ்வின் மலையில்
விழுந்தார்கள்,
ஆனந்த அலையில் மிதந்தார்கள்.
மனிதனாய் மண்ணில் வந்த
இயேசு
கடவுளாய்
முதன் முதலாய்
கண்ணுக்கு முன் வந்தார்.
No comments:
Post a Comment