விதைக்கச் சென்றான்
ஒருவன்.
விதைகளில் சில
சுவடுகள் அலையும்
சாலைகளில் சிதறின.
அவை
பறவைகளின் அலகுகளால்
கொத்தப்பட்டு குற்றுயிராகி
உணவாக நிறம் மாறின.
முட்களிடையே
சில தெறித்தன,
முளைகள் வெளிவந்து
வெளி உலகைப் பார்த்தபோது,
முட்களின் முனைகளால்
நெறிபட்டு முறிபட்டு
உயிர்விட்டன.
பாறை மீதும் சில விதைகள்
விழுந்தன,
வேர் நுழையும் வழி இன்றி
வெயிலுக்கு உயிலெழுதி
சருகாகி செத்து மடிந்தன.
சில
உழவு நிலத்தில் விழுந்தன.
வயலில் விழுவது தானே
விதைக்கே விருது.
விழுந்தவை
எழுந்தன.
நூறுமடங்கு, அறுபது மடங்கு, முப்பது மடங்கு
என
அமோகமாய் அறுவடையாயின.
விதைப்பவன் நானே.
விதைகள் என் வார்த்தைகள்,
நிலம் உங்கள் மனம்.
வழியோர விதைகள்
என் வார்த்தைகளைப் புரியா,
புரிய முயலா
உள்ளங்களில் விழுந்தவை.
அவை தீமையின் தீனியாகி
தின்னப்பட்டு மறைந்து போகும்.
பாறை மீதான விதை
இதயம் தீண்டி முளைப்பவை,
ஆனால்
ஆணி வேரின்றி அறுபடுபவை.
இதயம் தீண்டிய விதைகள்
பதியம் ஆகாமல் புறக்கணிக்கப்படும்.
முள்ளிடையே விதை,
அரைகுறை இதயத்தின்
அழுத்தமான உதாரணம்.
உலக நெரிசல்களால்
என்
வார்த்தைகள் அங்கே
வலுக்கட்டாயமாய் கிழித்தெறியப்படும்.
நல்ல நிலம்,
வார்த்தைகளைக் கேட்டு,
வளமாய் இதயத்தில் ஊன்றி,
அதன் நிழலில் நடப்பவன்.
பலன் தருபவன்
அவன் தான்.
விண்ணக வாழ்க்கை அவனுக்கானதே.
No comments:
Post a Comment