செயல்களின் வயல்கள் விளையட்டும்
செயல்களால் எனைத் தீண்டாமல்
வேண்டுதலால் மட்டும்
எனைத் தீண்டுவோர்,
விண்ணகப் படி தாண்டார்.
என்
வார்த்தைகளை வாழ்பவன் மட்டுமே
வாழ்வுக்குப் பின்னும் வாழ்வான்.
தீர்வு நாளில் என்னிடம் வந்து
ஆண்டவரே,
உம் பெயரால் இறைவாக்கு உரைத்தேனே,
நோய்களை நிவர்த்தினேனே,
பேய்களை துரத்தினேனே,
என்பார்கள்.
நான் அவர்களிடம்,
அறிவிலிகளே அகன்றுபோங்கள்.
உங்களை நான் அறியேன்,
என்
செயல்களுக்கும் உங்கள் சொல்லுக்கும்
இடையே
நிரப்பிட இயலா
பள்ளத்தாக்கைப் பறித்தீர்கள்.
உங்கள் வாழ்க்கை
ஆற்று நீரில் விழுந்து
தற்கொலை செய்துகொள்ளும்
மணல் வீட்டைப் போன்றதே.
பாறை மீது பதியனிடுவது
செயல்களின் அஸ்திவாரங்களே.
எனவே,
புயலுக்கும் காற்றுக்கும்
பலியாகும் மணல் வீட்டில்
அடித்தளமிட்டு அவதிப்பட வேண்டாம்.
அஸ்திவாரங்களை
பாறைமீது பதியமிடுங்கள்.
வாழ்வியல் செயல்களே
வாழ்வின் பாறைகள் !
No comments:
Post a Comment