எதிரிக்குப் பூ கொடு
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல் எல்லாம்
வீணர்களின் விவாதங்கள்.
பழிக்குப் பழி
அழிவின் ஆரம்பம்.
யாரேனும் உன்
வலக்கன்னத்தில் அறைந்தால்
அடுத்த கன்னத்தையும்
அடி வாங்க நீட்டு.
தீமையைத் தீமை
தீயிட்டு அளிப்பதில்லை,
குருதியைக் குருதி
கழுவிடல் இயலாது.
புன்னகையின் நீளமே
தீமையின் வேகத்தை
தடைபோடக் கூடும்.
கோப மலைகளாய்
முட்டிக் கொள்வதை விட
சாந்த அலைகளாய்
கட்டிக் கொள்வது சிறந்தது.
உன்
உள் ஆடைக்காய் வழக்கிடுபவனுக்கு
மேலாடையையும் மகிழ்வோடு கொடு.
கேட்பவனுக்கு
கொடு,
வேண்டுவோர்க்கு வழங்கு,
கடன்கேட்போனுக்கு
முகம் கோணாதே.
நேசம் என்பது
நண்பனுக்கு மட்டுமான
நன்கொடையல்ல.
பாசம் என்பதை
பகைவனுக்கும் பகிர்ந்தளி.
நன்மைக்கு நன்மையை
எடைக்கு எடை கொடுப்பது
சாதாரண மனிதனின்
சராசரி நடைமுறைகள்.
நீங்கள்
தீமைக்கும் நன்மையையே
பதிலாய் வழங்கிடுங்கள்.
பகையற்ற பூமியே
திசையெட்டும் நீளட்டும்.
No comments:
Post a Comment