விழிப்பாய் இருங்கள்
விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்.
தீயவை தீய்க்குச் சொந்தம்,
நல்லவை மட்டுமே
நீதியாசனத்துக்குச் சொந்தம்.
எனவே,
விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்
போலிகளைப் பிரித்தறியும்
பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்களை
உள்ளுக்குள் உலவவிட்டு,
வெள்ளை ஆட்டுத்தோலை
வெளியே உடுத்தியிருப்போரை
அகக்கண் கொண்டு அறியுங்கள்.
உச்சரிப்பதில் அவர்கள்
எச்சரிக்கையாய் இருந்தாலும்,
செயல்களில் சுயமுகம்
தலை நீட்டும்.
வார்த்தைகளை விடுத்து
வாழ்கையிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்.
முட்செடிகளின் முனைகளில்
திராட்சைக் கொடிகள்
காய்ப்பதுமில்லை,
அங்கே யாரும்
அத்திப் பழங்களை கொய்வதுமில்லை.
சிந்தனையின் இமை விலக்கி
பார்வைகளை வடிகட்டி
விழிப்பாய் இருங்கள்.
விழிப்பாய் இருப்பவர்கள்
இழப்பதில்லை.
No comments:
Post a Comment