Thursday, August 2, 2018

ஒளியாய் இரு, ஒளியாதிரு

ஒளியாய் இரு, ஒளியாதிரு


நீ,
உலகிற்கான ஒளி.

விளக்கின் பணி
மரக்காலின் கீழ் மறைந்து கிடப்பதல்ல
விளக்குத் தண்டின்
தலையில் அமர்ந்து
வெளிச்சத் திசைகளை
விளக்கி வைப்பது.

சூரியன் பூமிக்குள்
புதையுண்டு கிடந்தால்
யாருக்கேனும் பயனுண்டோ ?

கலங்கரை விளக்கம்
பக்கவாட்டில் படுத்துக் கிடந்தால்
பயணிகளுக்கேது பயன் ?

மலைமேல் உள்ள ஊர்
மறைவாய் இருப்பதில்லையே !
சிகரத்தை யாரும்
திரைகட்டி மறைப்பதில்லையே,

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

உன் ஒளியும்
ஒளிக்கப்படவேண்டாம்.
தயக்கங்களை எல்லாம்
விலக்கிவை,
உள்ளுக்குள் உன்னை நீ
துலக்கிவை.

No comments:

Post a Comment