Thursday, August 2, 2018

பாதைக்கான சில போதனைகள்


பாதைக்கான சில போதனைகள்


நீ,
கட்டளைகளைக் கடைபிடி,
துருப்பிடித்த இதயங்களின்
ஓரங்களிலும் கரம் தொடு.

கட்டளைகளால்
மனதின் துரு களை.
பூமியில் ஒழுக்கத்தில் வாழ்பவன்
வான் வீட்டுக்கு உரியவன்
அங்கே
பெரியவனாய் பவனி வருவான்.

கொலை செய்வது
மட்டுமல்ல,
சினம் கொள்வதே
தண்டனைக்கான சின்னம் தான்.

தன்னுயிரை கொலுவிலேற்றி
அயலானைக்
கழுவிலேற்றாதே.

ஒழுக்கமான மனைவியை
விவாகரத்து செய்வது
விபச்சாரக் குற்றம்.

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே.


கண்களே உன்
உடலுக்கான விளக்கு.
உன் கண்வாசல் அடைந்துவிட்டால்
உடல் முழுதும்
இருட்டுக்குள் இடம் பெயரும்
ஒளி வர வழிசெய்.

கவலைகளை
களஞ்சியத்தில் சேர்ப்போரே,
கவலைக் குவியல்களால்
ஆயுளில் அரை மணி நேரம்
அதிகரிக்க இயலுமா ?

பின் ஏன்
கவலைகளோடு
கை குலுக்குகிறீர்கள் ?
மகிழ்ச்சிக்கு மட்டுமே மாலையிடுங்கள்.


பன்றிகளுக்கிடையில்
முத்துக்களை இடவேண்டாம்.
அவை
சகதியில் தான் சங்கமிக்கும்.
சகதி கலந்த சந்தனம்
பின்
சுய முகம் காட்டுவதில்லை.


முள்ளில் மட்டுமே
நீ
முதலீடு செய்தால்
பூக்கள் உனக்காய் பூத்திருப்பதுமில்லை,
காய்கள் உனக்காய்
காய்த்திருப்பதுமில்லை.


தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.
பயணங்கள் இலகுவானால்
இலக்கில் வேதனை வரவேற்கும்.
பயணங்கள் வலி தந்தால்
இலக்கில் இன்பம் வீற்றிருக்கும்.


சட்டங்களின் ஆகளுக்குள்
மனிதாபிமானம் மடிய வேண்டாம்.
மனிதத்துக்காய்,
காதறுந்து போன உங்கள்
சட்டங்களை சரிசெய்யுங்கள்.

இயேசுவின் அறிவுரைகள்
அளவில் சிறியதாய் தெரிந்தன.
பாதிப்பில்
பெரியதாய் விரிந்தன.

No comments:

Post a Comment