இயேசு எனும் நல்ல மேய்ப்பன்
கேளுங்கள் !
ஆட்டுப்பட்டிக்கு
வாசல் வழியாக வராமல்
குறுக்கு வழியாய் குதிப்பவன்
கொள்ளைக்காரன்.
பின்வாசலின் கதவுடைத்தோ,
கூரையின் தலையுடைத்தோ
நேர் வழியை
நிராகரிப்பவன் அவன்.
வாசல் வழியாய் வருபவனே
ஆயன்.
அவன் குரல்
ஆடுகளின் பரிச்சயக் குரல்
எச்சரிக்கை மணி அவிழ்க்கும்
நம்பிக்கைக் குரல்.
ஆயனின் சுவடுகளில்
ஆடுகள்
பாதுகாப்புப் பயணம் தொடரும்.
அன்னிய காலடிகளிலோ
அவலக் குரலையே அவிழ்க்கும்.
நானே நல்ல மேய்ப்பன்.
மீட்பின் முற்றமும்
வாழ்வின் வாசலும் நானே.
பழுதான போதனைகளிலும்,
எழுதாத சாதனைகளிலும்
விழவேண்டாம்.
வேலையாள்
ஓநாய்களின் கூட்டம் கண்டால்
ஆடுகளை விட்டுவிட்டு
உயிர்காக்க ஓடுவான்.
ஆயனோ அகலான்.
கிளைகள் வாடிப் போனாலும்
ஓடிப் போவதில்லை வேர்.
ஆழத்தில் அமிழ்ந்து
ஆடுகளைத் தாங்கும் ஆயனைப் போல்.
நல்ல ஆயன் நானே.
என் வார்த்தைகளைக் கேட்டு
வார்த்தைகளை வாழ்பவன்
செத்த பின்னும் த்தியமாவான்.
கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியும் வரை
ஒற்றை மணி தான்.
மடிந்த பின்போ
கற்றை மணியாய் உருமாறும்.
இரண்டாம் ஜாமமும்
இருண்டபின்,
பூமியின் பாத்திரங்களில்
சூரிய ஒளி ஏது ?
ஒளி இன்னும் சிறிது நேரமே
ஒளிரும்,
இருட்டும் முன்
பாதை தேர்ந்தெடுப்பவன்
புத்திசாலி.
No comments:
Post a Comment