Friday, August 3, 2018

தந்தையோடு செபம்


பின்னர் இயேசு
கெத்சமெனித் தோட்டம் வந்தார்.
பேதுரு,யாக்கோபு,யோவான்
அவரோடு இருந்தனர்.

இறப்புக்கு முந்தைய இரவின்
வேதனையில் இயேசு செபித்தார்.

தந்தையே
முடியுமெனில்
இந்த வலி மடிந்து போகட்டும்.
ஆயினும்,
என் விருப்பம் முக்கியமன்று
உம் விருப்பமே என் பாக்கியம்.

மனிதனாய் வந்த மனுமகன்
வேதனையின் வார்த்தைகளை
வெளியிடுகிறார்,
ஆனாலும்
தந்தையின் விருப்பத்துக்கு
தலைவணங்குகிறார்.

சீடர்களோ
நித்திரையின் உச்சத்தில்
விழுந்து கிடந்தார்கள்.

அவர்கள்
நிலமையின் வீரியத்தை
உணராதவர்கள்.
பெருமழை வருவதறியாமல்
பறந்து திரியும்
பஞ்சு போல,
ஓய்வில் சாய்ந்திருந்தார்கள்.

ஒருமணி நேரம் செபிக்க
உங்களுக்கு முடியாதா ?
உள்ளம் ஊக்கமானது,
ஊனுடல் வலுவற்றது தான்.
ஆயினும்
விழித்திருந்து செபியுங்கள்.

கூறிய இயேசு,
இரண்டாம் முறையும்
தனியே சென்று
தந்தையிடம் செபித்தார்.

நான் பருகினால் மட்டுமே
இந்த
துன்பத்தின் பாத்திரம் காலியாகுமெனில்
விருப்பத்துடன் பருகுவேன்.
உம்
திட்டம் மட்டுமே நிறைவேறட்டும்
என்றார்.

மூன்றாம் முறையாக
மீண்டும் மனசும் உடலும் மண்டியிட
இயேசு செபித்தார்.

ஆழமான செபத்தின்
கரைகளில்
நிம்மதிக் காற்று அவரை வருடியது.
இதயம்
எதையும் தாங்க தயாரானது.

பின் சீடர்களிடம் வந்து,
தூக்கம் போதும்
துக்கத்தின் காலம் துரத்துகிறது.
என் சாவுக்கான மேளம்
சப்தமிடுகிறது.

எழுந்திருங்கள்
போகலாம் என்றார்.

நீளமான தூக்கத்தில்
மூழ்கிக் கிடந்த சீடர்கள்
அந்த
விடியலுக்கு வெகுதூரமிருக்கும்
அதிகாலையில்
தூக்கத்தை உதறி எழுந்தார்கள்.

No comments:

Post a Comment