அவர்களை நோக்கி
ஆயுதங்களோடு
ஓர் அவசரக் கூட்டம் வந்தது
யூதாஸ் தலைமையில்.
யூதாஸ் முன் வந்தான்,
இயேசுவை முத்தமிட்டான்.
இயேசு அவனிடம்,
யூதாஸ்,
முத்தம் அன்பின் அடையாளம்,
அதை
சுட்டிக் காட்டும் அடையாளமாக்கி
அசிங்கப்படுத்தி விட்டாயே
என்றார்.
படை வீரர்கள்
உடைவாள்களை உருவிக் கொண்டு
கள்வனை வளைக்கும்
காவலர் போல
சுற்றி வளைத்தனர்.
சினந்த சீடர் ஒருவன்
கூர் வாளெடுத்து உருவி
வீரன் ஒருவனின்
காதைக் கத்தரித்தான்.
இயேசு தடுத்தார்.
உன் வாளை உறையில் போடு,
வாளெடுத்தவன் வாளால் மடிவான்.
இவை நிகழ வேண்டும்
என்பதே ஏற்பாடு என்றார்.
துண்டாய் விழுந்து
துடித்தச் செவியைத் தேடி எடுத்து
வெட்டுண்ட இடத்தில் தொட்டு
ஒட்டுப் போட்டார் இயேசு.
தீமையின் பறவைக்கும்
நன்மையின் சிறகுகளை
நல்குகிறார்.
தடவிப் பார்த்த காவலன் விரல்கள்
வெட்டுப்பட்ட
சுவடு கூட இல்லாததால்
திடுக்கிட்டுத் திரும்பியது.
தனக்கான
பலிபீடம் தயாரித்தவர்களோடும்
பரமனிடம் இருந்த பரிவு
பிடிக்க வந்த பரிவாரங்களை
உலுக்கியது.
ஆனாலும்
அவர்கள், ஆள்வோரின்
கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்.
ஆணை யின்
மிதியடிகளை
தூக்கிச் சுமப்பவர்கள்.
இயேசு
அவர்களைப் பார்த்து.
திருடனைப் பிடிக்க வருவதுபோல்
இருட்டைக் கூட்டிக் கொண்டு
திரிவதேன் ?
எதற்கு இந்த
அதிகாரத் தடிகளும்,
மரணம் சுமக்கும்
உடை வாள்களும் ?
நான்
நாள் தோறும் கோயிலில்
நற்செய்தி அறிவிக்கிறேன்
அப்போதெல்லாம் நீங்கள்
ஆயத்தமாகவில்லையா
என்றார்.
இழுத்துச் செல்ல வந்தவர்கள்
இயேசுவை
அழைத்துச் சென்றார்கள்.
உடனிருப்பேன் என்ற சீடர்கள்
உடனே
ஓடிப்போயினர்.
No comments:
Post a Comment