இன்னும் இரண்டு நாளில்
பாஸ்கா விழா.
இறைமகன் அப்போது
மரச் சிலுவை மரணத்துக்கு
கையளிக்கப்படுவார்.
சீடர்களிடம்
தன் சாவின் காலத்தைச்
சொன்ன இயேசு,
நீங்கள் என்னைவிட்டு
விலகி விட
விரும்புகிறீர்களா ?
என கேட்டார்.
எதிர்ப்பின் சூறாவளிக்கு
சிதைந்துவிடாத
சிந்தனை இருக்கிறதா,
பயத்தின் புயலில்

நிறம் மாறி விடாத
உரம் இருக்கிறதா என
அறியவே வினவினார்.
பேதுரு உடனே
பதிலளித்தார்,
ஆண்டவரே,
வாழ்வுதரும் வார்த்தைகள்
உம்மிடம் இருக்க,
வேறு யாரிடம் நாங்கள் போவோம் ?
இரையாவேனென்னும் பயத்தில்
மீன்கள்
கரையேறலாமோ
கடவுளே –
என்பதாய் ஒலித்தன
பேதுருவின் வார்த்தைகள்.
இயேசு புன்னகைத்தார்.
நீங்கள்
அகல மாட்டீர்கள் என்பதும்,
உங்களில் ஒருவன்
அலகை என்பதும்
எனக்குத் தெரியும் என்றார்.
No comments:
Post a Comment