Friday, August 3, 2018

மரணம் என்னை நெருங்கும்


இன்னும் இரண்டு நாளில்
பாஸ்கா விழா.
இறைமகன் அப்போது
மரச் சிலுவை மரணத்துக்கு
கையளிக்கப்படுவார்.

சீடர்களிடம்
தன் சாவின் காலத்தைச்
சொன்ன இயேசு,

நீங்கள் என்னைவிட்டு
விலகி விட
விரும்புகிறீர்களா ?
என கேட்டார்.

எதிர்ப்பின் சூறாவளிக்கு
சிதைந்துவிடாத
சிந்தனை இருக்கிறதா,

பயத்தின் புயலில்
நிறம் மாறி விடாத
உரம் இருக்கிறதா என
அறியவே வினவினார்.

பேதுரு உடனே
பதிலளித்தார்,
ஆண்டவரே,
வாழ்வுதரும் வார்த்தைகள்
உம்மிடம் இருக்க,
வேறு யாரிடம் நாங்கள் போவோம் ?

இரையாவேனென்னும் பயத்தில்
மீன்கள்
கரையேறலாமோ
கடவுளே –
என்பதாய் ஒலித்தன
பேதுருவின் வார்த்தைகள்.

இயேசு புன்னகைத்தார்.
நீங்கள்
அகல மாட்டீர்கள் என்பதும்,
உங்களில் ஒருவன்
அலகை என்பதும்
எனக்குத் தெரியும் என்றார்.

No comments:

Post a Comment