Friday, August 3, 2018

துணிந்தபின் விலகாதே


ஒருவன்
கோபுரம் கட்ட
ஆசைப்பட்டால்,
அஸ்திவாரம் தோண்டும் முன்பே
அதை
ஆராய்ந்து பார்க்கட்டும்.

பாதியிலே
விட்டு விடுபவன்
பழிச்சொல்லுக்கு ஆளாவான்.

போரிடச் செல்லும் அரசன்
எதிர் படையை
எதிர்கொள்ளும் முன்
படை பலத்தை
கணித்துக் கொள்ளட்டும்.

வெல்லும் போரா
வெள்ளைக் கொடியா என்பதை
அந்த
முன் ஆராய்ச்சி
முடிவு செய்யட்டும்.

கிளைகளின் கனவுகள்
பலிக்க வேண்டுமெனில்
வேர்களின் கால்கள்
நிலைக்க வேண்டும்.

என்னை பின்செல்பவன்,
தன்னை வெறுத்து
தன்
சிலுவையைச் சுமந்துகொண்டு
பின் செல்லட்டும்.

இது
பூக்களின் பயணமல்ல.
சிலுவைகளின் பேரணி.

இது
சங்கீதங்களின் வழிசல்
பாதையல்ல.
சங்கடங்களின் நெரிசல்
பாதை.

ஆன்மாவை இழந்தவன்
ஆகாயம் வரை தனதாக்கினாலும்
ஆதாயம் என்ன ?

உலகையே உள்ளங்கைக்குள்
உருட்டி வைத்தாலும்
உயிரை இழந்தால் பயனென்ன ?

முதன்மைப் பட்டியலில்
முதலிடம் பிடிப்பவை
விண்ணக வாழ்வின்
நுழைவுச் சீட்டுகளாகட்டும்.

மண்ணுலக வாழ்வின்
மதிப்பீடுகளின் அளவைகளில் தான்
விண்ணக இருக்கைகள்
வழங்கப்படும்

No comments:

Post a Comment