இயேசுவின்
பன்னிரு சீடரில் ஒருவன்
யூதாஸ்.
யூதாஸ்
சலன மனதின் சொந்தக்காரன்.
மனக் குளத்தில்
வெள்ளிப் பணம் விழுந்தால்
துள்ளிக் குதிக்கும்
மீனாய் மாறுபவன்.
இயேசுவைக் கொல்ல
சதி வேலை செய்த
தலைமைக் குருக்கள்
வலையை வீசி
யூதாசைப் பிடித்தார்கள்.
இயேசுவை பிடிக்கப் போகிறோம்.
அவரை நீ
படைவீரர்களுக்கு
அடையாளம் காட்டினால்,
வெள்ளிப் பணத்தை
அள்ளிச் செல்லலாம்
செல்வம் கொண்டு உலகை வெல்லலாம்.
என
ஆசை விலங்குகளை
அவிழ்த்து விட்டார்கள்.
யூதாஸ்
சிந்தித்தான்
காட்டிக்கொடுக்கலாமா வேண்டாமா
என்றல்ல,
எத்தனை பணம் வாங்கலாம்
என.
காட்டித் தருவேன்
முப்பது வெள்ளிப்பணம்
தப்பாது தருவீர்களா ?
யூதாசின் விண்ணப்பம்
வாதிடாமல்
ஒத்துக் கொள்ளப்பட்டது.
ஒரு
சகாப்தத்தின் சரிவுக்கு
சதித் திட்டம் அங்கே
சப்தமில்லாமல் ஒப்பமானது.
சூரியனையே
எரித்துச் சாம்பலாக்க நினைத்த
அறிவிலிகளின்
அருகிருந்தான் அவன்.
கட்டளைகளுக்கு அப்பாற்பட்ட
கர்த்தரை
நான்
கட்டிப் பிடித்து காட்டித் தருவேன்.
ரத்தத்தின் மாளிகைக்கு
அவரை
முத்தத்தின் முன்னுரையோடு
அனுப்பிவைப்பேன்.
என்றான்.
சுயநல அழைப்புகளுக்கு
செவிகொடுத்ததால்,
யூதாஸ்
இறையின் வரலாற்றில்
ஓர்
கறையாய் உட்கார்ந்தான்.
No comments:
Post a Comment