தீர்ப்புகள் தீர்வுகள் அல்ல
உன் உப்பள உள்ளங்களில்
உறைந்திருக்கின்றன
ஓராயிரம் கறைகள்.
உங்கள் குப்பை மனசை
குழிக்குள் மறைத்துவிட்டு,
பிறரின்
சின்னத் தவறுக்காய்
நீங்கள் நீதிபதியாகாதீர்கள்.
குறையற்ற கரங்கள்
மட்டுமே
கறை கழுவ நீளட்டும்.
.
அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.
.
நீ இடும் தீர்ப்புக்கள்
நாளை
உன்வாசலில் கத்தியோடு காத்திருக்கும்.
உறைவாள் உருவியவன்
உறைவாளில் சொருகப்படுவான்.
ஆதலினால்
அன்பெனும் மயிலிறகில் மட்டுமே
ஆசனம் செய்யுங்கள்.
.
மலைபோன்ற பிழைகளுக்குள்
பிழைப்பு நடத்திக் கொண்டு
பிறரின் சிறு தவறுக்காய்
சிரச்சேதம் செய்யாதே.
முதலில் உன் பிழை அழி.
பின்பு வந்து பிறர் தவறு திருத்து.
.
பொய்யாணை இடாதே,
உன் தலைமயிரை
நிறம் மாற்றி வளரவைக்க
உனக்குத் திறமையில்லை.
உன் தலைமயிரின்
வளர்ச்சிக்கான கடிவாளமே
உன்னிடம் இல்லையெனும்போது,
எனவே
அகந்தை உன்னுள் இருப்பதில்
அர்த்தமே இல்லை.
.
ஆம், இல்லை,
இரண்டில் ஒன்றைப் பதிலாய் கொள்.
இது தவிர்த்த
மழுப்பல்கள் தீயவன் சொல்.
.
No comments:
Post a Comment