அயலானுக்குச் செய்
என்றார் இயேசு ?
அயலான் யார் ?
ஓர்
உவமை வாய் திறந்தது.
நெடிய பயண நடுவே
கள்வர்களின் குருட்டு ஆயுதங்களில்
காயங்களின் கொள்முதல்
நிலையமாய்
குற்றுயிராய்க் கிடந்தான்
ஒருவன்.
போதகர் ஒருவர்
அவ்வழியே வந்தார்.
பார்த்தார் சில வினாடி,
போதனையே பெரிதென்று
பாதை மாறி பாதம் வைத்தார்.
லேவியன் ஒருவன் வந்தான்
கண்ணைக் கட்டி
கடந்து போனான்.
இன்னும் சிலர் சென்றனர்,
பரிதாபப் பார்வைகளும்
அவசரப் பாதங்களும் சுமந்து.
சாராசரிச் சமாரியன் ஒருவன்
சரியாய் வந்தான்.
காயம் கண்டு கண்ணீர்
விட்டு கடந்து செல்லவில்லை.
கண்ணீர் காயத்தின் அடையாளமே
களிம்பல்ல என்பதை
புரிந்து நெருங்கினான்.
காயம் துடைத்து
கட்டுகள் இட்டு,
முதலுதவி முகம்கொண்டு
சாவடிக்கு தூக்கிச் சென்றான்.
வெள்ளிக்காசுகள் செலவிட்டு
வைத்தியம் செய்தான்.
நீங்கள்,
பட்டியலாளராய்
பார்வையிடல் வேண்டாம்,
பணியாளராய்
மண்டியிடுங்கள்.
அதுவே மனித மாண்பு.
No comments:
Post a Comment