Friday, August 3, 2018

விண்ணரசு, தோட்டத் தலைவன்


விண்ணரசு,
தன் திராட்சைத் தோட்டத்திற்கு
வேலையாள் தேடிய
வீட்டுத் தலைவன் போன்றது.

கதிரவன் வானத்தில்
கதிரறுக்கப் புறப்படுகையில்
தேடி வந்தான்
தலைவன்.

வழியில் கண்ட சிலரை அழைத்து
வேலைக்கு அனுப்பினான்.
நாளொன்றுக்கு
ஒரு வெள்ளிக்காசென்று
கூலி விவரத்தையும்
குறித்துக் கொள்ளச் சொன்னான்.

பின் ஒன்பது மணிக்கும்
பிற்பகல் மூன்று மணிக்கும்
அவ்வாறே
வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.

மாலை
ஐந்து மணிக்கும்
வெளியே சென்றான் தலைவன்.

அப்போதும் சிலர்
வெறுமனே நின்றுகொண்டிருந்தனர்
பொழுதை
வீணாய்த் தின்று கொண்டிருந்தனர்.

ஏன் நீங்கள்
சோம்பித் திரிகிறீர்கள் ?
வாழாவிருப்பது வாழ்வுக்கு நல்லதா
என்றான்.

ஐயா..
வேலை தருபவர் இருந்தால்
நாங்கள் ஏன்
கவலையுடன் கைகோர்த்து
சோகத்தில் சுற்றித் திரிகிறோம் ?

வேலையிலமர்த்த
யாரும் வரவில்லை
பகல்
வேளையும் முடிகிறது
இனியென்ன செய்ய ?

தலைவன் இரங்கினான்
அவர்களையும்
வேலைக்காய்
திராட்சைத் தோட்டம் அனுப்பினார்.

மாலை
ஆறுமணி
கூலியின் நேரம்
வேலையாட்களின்
குதூகலத்தின் நேரம்.

ஐந்து மணி ஆட்கள்
வந்து நின்றனர்
வெள்ளிக்காசு ஒவ்வொன்றை
பெற்றுச் சென்றனர்.

விடியலில் வந்தவர்
அதிகம் கிடைக்குமென்று
ஆவல் கொண்டனர்,
ஆனால் ஆச்சரியமாய்
அவர்களுக்கும்
ஒரு வெள்ளிக்காசே தரப்பட்டது.

தலைவனிடம் அவர்கள்
தர்க்கம் செய்தனர்,
ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும்
ஒரு நாள் முழுதும்
உழைத்தவனுக்கும்
ஒரே கூலியா ?

மாலை மட்டும்
வேலை செய்தவனுக்கும்,
வெயில் முழுதும்
உயிர் காய்ந்தவனுக்கும்
சரி நிகர் சம்பளமா ?

நியாயம் இல்லாத தலைவர் நீர்
எங்களுக்கு
அதிகமாய்த் தந்திருக்க வேண்டும்
இல்லையேல்
அவர்களுக்குக்
குறைவாய்க் கொடுத்திருக்க வேண்டும்.

தலைவன் சொன்னான்,
உனக்கான
வெள்ளிக்காசு,
வழங்கப்படவில்லையெனில்
வழக்கிடு.

ஒரு வெள்ளிக்காசு என்பது
உன்னிடம் நான் செய்த
ஒப்பந்தம்.
தப்பென்றால் சொல்.

இன்னொருவனுக்கும்
அதயே வழங்க
எனக்கு
உரிமையில்லை என்பது சரியில்லையே.

தலைவனின் விளக்கத்தால்
தலை குனிந்தனர்
அவர்கள்.

கடைசியானோர்
முதலாவர்.
தேவையின் அடிப்படையில்
தரப்படுவதே என் கூலி.

No comments:

Post a Comment