விளம்பரப் பூக்கள் மணப்பதில்லை
பிச்சையிடு,
ஒரு கை தானம் செய்கையில்
மறுகைக்குக் கூட
விளம்பரமிட வேண்டாம்.
புகழுரையின் புழுதித் தூறலுக்காய்
உன்
இதயத்தின் கரைகளை
கறையாக்க வேண்டாம்.
அலைகள் தொலைந்துபோன
ஆழ்கடலாய்.
சத்தங்கள் செத்துப் போன
தொலை மலையாய் இரு.
தானம் தருகையில்.
வெளிவேடம் வேண்டாம்,
நோன்பு கால நோவுகளை
முகத்தில் படர விடாதே,
புத்துணர்ச்சிப் புன்னகை உடுத்து,
நோன்பின் சாம்பல் நிழல்கள்
மறைவாகவே உறையட்டும்
தனிமைச் செபங்கள்
தாழிட்ட அறைக்குள்
நடக்கட்டும்.
அதிகமான வார்த்தைகளல்ல,
ஆழமான உணர்வே
உன்னதமான செபம்.
மனுக்களை மட்டுமே
அவிழ்த்து வைத்து செபிப்பது
மனுமகனுக்குப் பிடித்ததல்ல,
தவழும் குழந்தையின்
தேவைகள்
தந்தைக்குத் தெரியாதா ?
உன் தேவைகளையும்
உனக்கும் முன்
உன்
ஆண்டவர் அறிகிறார்.
No comments:
Post a Comment