தொடர் செபம்
இடர் தீர்க்கும் என்பதை
சுடர் விடும் ஓர் உவமையால்
பரமன் இயேசு உரைத்தார்.
கடவுளுக்கு அஞ்சாமல்,
மனிதனையும் மதிக்காமல்
ஓர்
நீதியற்ற நடுவன் இருந்தான்.
எதிரியைத் தண்டிக்கச் சொல்லி
ஓர்
கைம்பெண் அவரை
தொடர்ந்து விண்ணப்பித்தாள்
நீண்ட நாள்
நடுவன்
தன் கொள்கையிலிருந்து
நகரவேயில்லை.
கைம்பெண்ணுக்கு
நீதி கைவரவில்லை.
அவள்
கண்ணீர் விண்ணப்பங்கள்
அவன் வீட்டுக்
கதவை விட்டு விலகவுமில்லை.
தொடர்ந்து தட்டினாள்
பாதி ராத்திரியிலும்
நீதி கேட்டாள்.
அவள்
தொந்தரவினால்
உந்தப்பட்டு தன்
உதவும் கரத்தை
கதவுக்கு வெளியே நீட்டினான்
அவன்.
அவள்
நிம்மதி நித்திரை கெடுக்கிறது
என்று சொல்லி
நீதி வழங்கினான்
நிம்மதியாய்த் தூங்கினான்.
நீதியற்ற நடுவனே
இப்படி
இதயம் மாறினான் என்றால்,
நீதியின் தேவன்
கருணை மழையை
கணக்கின்றி பொழியாரோ ?
எனவே
வேண்டுதல்கள் தொடரட்டும்,
வேண்டுவன தரப்படும்.
என்றார்.
செய்தி கேட்ட மக்கள்
நிம்மதியுடன் நடந்தனர்.
உதடுகளில்
செபத்தை உடுத்தியபடி.
No comments:
Post a Comment