அறிகுறிகளென்ன ஆண்டவரே ?
சீடர்கள்
தூவிய கேள்விக்கு
தூயவன் பதில் சொன்னார்.
என் பெயரைச் சொல்லி,
நான் தான் மெசியா என்று
ஈசல் கூட்டங்கள்
எழும்பி அலையும்.
எச்சரிக்கையாயிருங்கள்.
போர் முழக்கங்களையும்,
மரணத்துக்கான பறையடியையும்
கேட்டு
கலங்கவேண்டாம்.
இவை நிகழவேண்டிய நிஜங்கள்.
இது
ஒரு முடிவின் துவக்கம் மட்டுமே.
இதுவே
முடிவின் முடிவொலி அல்ல.
நாடுகள் தாகம் கொண்டு
நாடுகளை
அழிக்க எழும்பும்.
அரசுகள் அரசு வெறி கொண்டு
அரசர்களோடு
ஆயுத போதனை நடத்துவர்.
நோய்களும்
பஞ்சங்களும்
உயிர் குடித்து
வீர்த்துக் கிடக்கும்.
உங்களை மக்கள்,
வேதனைக்கு விற்று விடுவார்கள்,
கொலைக் கயிறுகள்
உங்களுக்கு பரிசாக விழும்.
தெய்வத்தில் தைரியமாயிருங்கள்.
என்னை நேசிப்போரை
மக்கள் வெறுப்பார்கள்.
மக்கள் பலர்
இடறல் வெள்ளத்தில் வீழ்ந்து
மனுமகனை மறுதலிப்பர்.
ஒருவன் விரல்
இன்னொருவன் நெஞ்சுக்கு நேராய்
உயிர் கொல்லியாய்
உருமாறி நீளும்.
அக்கிரமங்களின் அணிகலன்கள்
மட்டுமே
அகிலம் முழுதும் அணியப்படும்.
உலகம் முழுதும்
விண்ணக போதனை
விரிந்த பின்னரே
இறுதி காலம் இறங்கிவரும்.
இறுதிவரை
உறுதிகொள்பவன்
பேறுபெற்றவன்.
No comments:
Post a Comment