பாடுகளின் பாதையை
விளக்கத் துவங்கினார்
இயேசு
துயரங்களின் துருவங்களுக்கே
தான்
பயணிக்கப்போவதை
அடுத்திருந்த சீடர்களுக்கு
எடுத்துக் கூறினார்.
மனுமகன்
மரணத்திற்குள் தள்ளப்பட்டு
மண்ணுக்குள் மூன்று நாள்
புதைக்கப்படுவார்.
மனுமகன்
முற்றுப்புள்ளி இடப்படும் கதையல்ல,
அவர்
ஆரம்பத்துக்காய் புதைக்கப்படும்
விதை.
மூன்றாம் நாள்
நான் உயிர்ப்பேன்.
மரணத்தின் சுருக்குக் கயிறுகளில்
மரணத்தைத் தூக்கிலிட்டு
நான் உயிர்ப்பேன்.
இயேசு சொல்ல
சீடர்கள் அதிர்ந்தனர்.
இயேசுவின் பின்னால்
கர்வத்துடன் பவனி வந்தவர்கள்,
இயேசு
மரணிப்பேன் என்றதை
ஜீரணிக்காமல் பார்த்தனர்.
சட்டென்று
சங்கடத்தின் வார்த்தைகள்
அவிழ்த்தார் சீமோன்.
ஆகாது ஆண்டவரே…
உமக்கிது நேராது,
என் விழிகள் அதை பாராது.
இயேசுவின் வார்த்தைகள்
கோபத்தில் எழுந்தன.
போ அப்பாலே சாத்தானே.
நீ
கடவுளின் கருத்துக்கு
விரோதமாய் நகர்கிறாய்.
இறப்பதற்காகவே
பிறந்தவன் நான்.
என் சாவு
தற்காலிக இருள் போன்றது
நிரந்தர வெளிச்சத்தின்
முன்னுரை அது.
கடவுளின் விருப்பத்தை
ஆமோதிக்காதவர்கள்
அகன்று போகட்டும்.
இயேசுவின் கோபத்தில்
சிக்குண்ட சீமோன்
பாயும் சிங்கத்தைக் கண்ட
பசு போல
சத்தமின்றி பின்வாங்கினார்.
No comments:
Post a Comment