Friday, August 3, 2018

பணி வாழ்வுக்குத் தேவை பணிவு


மரணத்துக்கு முந்திய,
இறுதி இரவுணவில்
இயேசு
சீடர்களின் பாதங்களை
தண்ணீரால் கழுவி
இடைத் துண்டால் துடைத்தார்.

உம் பாதம் பட்ட
நிழலில் நடந்தவர்கள் நாங்கள்
நீர்
எங்கள் பாதம் தொட்டு
கழுவுவதா ?

அரச கிரீடம் ஒன்று
அடிமை ஆடை துவைப்பதா ?
அதிர்ச்சிக் கேள்விகளால்
சீடர் குழு
நடுங்கியது.

தலைவன் என்பவன்
பணியாளன் என்பதை
பணி மூலம் புரியவைத்தார்.

பேதுரு வருத்த வார்த்தை
வருவித்தார்.

இயேசுவே
நீரா என் பாதங்களை
நீரால் கழுவுவது ?
நேராது பரமனே இது,
நேரானதல்லவே இது.

நான் உன் பாதங்களை
கழுவாவிடில்,
உனக்கு என்னோடு பங்கில்லை.
தாழ்த்துவதே தலையாய செயல்.
நான் செய்வது
பின்னர் உனக்குப் புரியும்.

எனில்,
பாதம் மட்டும் ஏன் பரமனே ?
தலையில் கூட
தண்ணீர் ஊற்றலாமே ?
பதட்டத்தில் பேசினார்
பேதுரு.

குளித்தவன் தூய்மையாய்
இருக்கிறான்
எனவே,
பாதம் கழுவினாலே
போதுமானது.

தலையில் இருந்தாலும்
தரையில் கிடந்தாலும்
கிரீடம் கிரீடம் தான்.

பணிவில் இருப்பவன் மட்டுமே
பணியில் இருக்க வேண்டும்.

உங்கள் ஆண்டவரான
நானே
உங்கள் பணியாளனானேன் !

நீங்களும்
கர்வத்தை அணியாமல்,
கவனமாய் இருங்கள்.

தற்பெருமைத் தலைகளை
துளிர்க்க விடாதீர்கள்
பணிவின் துணிவை வளருங்கள்.
என்றார்.

No comments:

Post a Comment