இயேசு
கோதுமை அப்பத்தை
கைகளில் ஏந்தி,
இது என் உடல் என்றார்.
திராட்சை இரசக் கிண்ணத்தை
எடுத்து
இது என் இரத்தம் என்றார்.
என் உடலை உண்டு
என் இரத்தத்தைக் குடித்து
என்
செயல்களுக்குள் செல்லுங்கள்.
இதுவே,
என் சாவுக்கு முந்தைய
இரவு உணவு.
இனிமேல் வருவதெல்லாம்
வேதனையின் காலம்.
போ யூதாஸ்,
நீ
செல்ல வெண்டிய தருணம் இது
செய்ய வேண்டியதை செய்.
என்றார்.
யூதாஸ் விலகினான்.
இயேசு பேசத் துவங்கினார்.
இப்போது
மானுட மகனின்
மாட்சிமைக் காலம்.
இன்னும் சில நாள் மட்டுமே
என் காட்சிக் காலம்.
பின் நீங்கள் என்னைக்
காணல் இயலாது.
நான் வரும் இடத்துக்கு
இப்போது நீங்கள்
வருவதும் நேராது.
மீண்டும் வருவேன்,
உங்கள் நம்பிக்கையின் மேல்
சில
பூக்களைத் தூவ.
உங்களுக்கான என்
கட்டளை ஒன்றே,
அன்பு செய்யுங்கள்.
நான் உங்களுக்குக் காட்டிய
அன்பின் ஆழத்தை
நீங்கள்
எல்லோர் மீதும் காட்டுங்கள்
பேச்சினால் பெரியவர்களாகக்
காட்டிக் கொள்ளும்
மனிதர்முன்,
நீங்கள்
புயல் போன்ற
செயல்களால் அறியப்படுங்கள்.
நீங்கள் என் பணியாளர் அல்ல,
ஏனெனில்
தலைவன் செய்வதை
பணியாளன் அறியான்.
நீங்களோ
என் தோழர்கள்.
என்னோடான பயணத்திற்கு
இணங்கியவர்கள்.
உங்களுக்கும் எனக்குமிடையே
மறைக்கும் திரைகள்
தொங்கியதில்லை.
எதிர் கருத்துக்கள் எதுவும்
தங்கியதில்லை.
உலகம் உங்களை வெறுக்கும்.
கவலைப் படாதீர்கள்
என்னையே மறுத்தவர்கள் அவர்கள்.
நீங்கள் இனி
உலகின் சொத்துக்களல்ல,
விண்ணக வித்துக்கள்.
நீங்கள் துயருறுவீர்கள்
அப்போது உலகம் மகிழும்.
நீங்கள் புலம்புவீர்கள்
அப்போதும் உலகம் மகிழும்.
ஆனால்,
உங்கள் புலம்பல் நீளாது.
வலியின் எல்லையெல்லாம்
மீண்டும்
என்னைக் காணும்போது
மாண்டு போகும்.
ஆனந்தம்
மீண்டு வரும் மீண்டும்.
அபோது நீங்கள்
சந்தோசத்தின் சக்கரவர்த்திகளாய்,
பூலோக அரியணையில்
புன்னகை புரிவீர்கள்.
உங்கள் அகமகிழ்ச்சி
அழிக்கப் பட மாட்டாது !
என்னிடம் நீங்கள்
விண்ணப்பங்கள் வைத்ததில்லை,
இனிமேல்
கேளுங்கள்… தரப்படும்.
உங்களுக்கு எதுவும் மறுக்கப் படாது
என்றார்.
பின்
வானத்தை நோக்கி.
தந்தையே,
நேரமாகி விட்டது
மகனை மகிமைப் படுத்தும்
என்றார்.
சீடர்கள்,
இயேசுவின் வார்த்தைகளை
உள்ளத்துள்
உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment