மாலையில்,
பன்னிரு சீடரோடு
பந்தியமர்ந்தார் பரமன்.
அப்பத்தை எடுத்து
பிரார்த்தனை முடித்துப்
பகிர்தளித்து,
சீடர்களைப் பார்த்து சொன்னார்,
நண்பர்களே,
உங்களில் ஒருவன் என்னை
காட்டிக் கொடுப்பான்.
தெளிவாய் வந்தது
தெய்வ வாக்கு.
ஒட்டிக் கொண்டிருக்கும்
உங்களில் ஒருவன்
எனை காட்டிக் கொடுப்பான்.
என்னை
சுட்டிக் காட்டும் அவனுக்கு
ஐயோ கேடு.
அப்போஸ்தலர்கள்
அதிர்ந்தனர்,
எங்களில் ஒருவனா ?
ஏனிந்த சந்தேகம் ஆண்டவரே.
வானுக்கு எதிராய்
பறவைகள் வழக்கிடுமா ?
நதியின் துளிகள்
மழைக்கு எதிராய்
மனு கொடுக்குமா ?
யார் என்று சொல்லுங்கள்
ஆண்டவரே,
யார் அவன் சொல்லும் !
சினத்தில் சீடர்கள் சிவந்தனர்.
என் பாத்திரத்தில் கையிட்டு
என் முகத்தில்
புன்னகையிட்டு,
என்னோடு இருக்கும் ஒருவனே
அவன்.
நம்பிக்கை மீது
கோடரி வைத்த அவனுக்கு
ஐயோ கேடு என்றார்.
யூதாஸ் அவரிடம்,
காட்டிக் கொடுப்பவன்
நானா ஆண்டவரே என
அப்பாவியாய்க் கேட்டான்.
நீயே சொன்னாய்
புன்னகைத்தார் பரமன்.
No comments:
Post a Comment