இயேசு
சீடர்களுக்கு
இறுதி நாள் நெருங்குகையில்
உறுதி உரையாற்றினார்.
யாரேனும் வந்து,
மனுமகன் அதோ
பாலைவனத்தில் பயணிக்கிறார்,
உள்ளறையில்
உட்கார்ந்திருக்கிறார்,
என்றால் நம்ப வேண்டாம்.
ஏனெனில்,
மின்னலின் வேகத்தில்
மனுமகன் வருகையும்,
ஒளியின் பாதையில் அவர்
பயணமும் இருக்கும்.
பிணம் எங்கேயோ,
அங்கே தான்
கழுகுகள் கூடும்.
உங்கள் உடலில்
பிணவாடை வராதபடி
பரிசுத்த எண்ணங்களால்
அழுக்ககற்றி வாழுங்கள்
வருகை நாட்களின்
வேதனைக்குப் பின்,
சூரியன் ஒளியிழந்து
இருட்டுக்குள் விழும்.
இருட்டுக்குள் சூரியன் விழுவதால்
இரவல் ஒளியின்றி
நிலவும் மங்கி அணைந்துபோகும்.
விண்மீன்கள் சருகுகளாய்
பூமிக்கு
பணியக்கும்.
அத்தி மர இலைகள்
அழகாய் மிருதுவாய் மலரும் போது,
கோடை இதோ
விரலிடை தூரம் என்பீர்கள்.
இறுதி நாளின் வருகையையும்,
இந்த
அறிகுறிகளால் அறியுங்கள்.
பாவிகள் அப்போது
புலம்பி அழுவார்கள்.
தூதர்கள் வந்து
நீதிமான்களை மட்டுமே
அழைத்துச் செல்வர்.
விழிப்பாய் இருங்கள்,
இதயத்தின் இமைகளை
கவனமாய் இமையுங்கள்,
ஒரு நாள் வரும்,
அது
மனுக்குலத்துக்குச்
சோதனைக் காலம்.
நானே அவர் என்று சொல்லி
கடவுளாய் காட்டிக் கொண்டு
பல
கபட ஓநாய்கள்
மாசற்ற குருதியின் மேல்
குறிவைத்துப் பாயும்.
அவற்றின் நகக் கீறலுக்கு
பலியாகாதீர்கள்.
உள்ளத்தின் உறுதியை
உற்றுப் பார்த்து
இற்றுப் போகச்செய்யும்
பல
தந்திர வேலைகளைச் செய்து
தலைவன் என்று
சில
குள்ள நரிகள் உள்ளம் தாவும்.
பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.
தொலைதூரப் பயணத்துக்கு முன்
தலைவன்
பணியாளனிடம் ஒப்படைக்கும்
வீட்டுச் சாவி
பத்திரமாய் இருக்கட்டும்,
தலைவனின் வருகையின் போது
வாசல்
ஒளியாய் இருக்கட்டும்.
நீங்கள்
துயிலும் நேரம் தலைவன் வந்தால்
இப்போது
பயிலும் பாடங்களுக்கு
அப்போது
அர்த்தமிருக்காது.
No comments:
Post a Comment