Friday, August 3, 2018

காய்பாவிடம் கையளிக்கப் படுகிறார்


இயேசு
காய்பா என்பவனிடம்
கையளிக்கப்பட்டார்,
அவன் ஒரு தலைமைக் குரு.

பொய்சாட்சிகளுக்காய் அவர்கள்
பிணங்களைப்
பிராண்டினார்கள்.

எந்த வலையில் போட்டு
இவனை இறுக்குவதென்று
இதயத்தைக் கசக்கினர்.

இறுதியில்
இவன் ஆண்டவரின் ஆலயத்தை
இடித்துக் தள்ளுங்கள்
மூன்று நாட்களில்
மீண்டும் கட்டுவேன் என்றான்,
என்றனர்.

உன் பதில் என்ன?
தலைமைக் குரு
அதிகாரத் தோரணையில்
அகங்காரமாய் கேட்டான்.

இயேசுவோ
மெளனத்தின் மீதே
மனம் சாய்த்திருந்தார்.

நீ
மெசியாவா ?
குரு மீண்டும் கொக்கரித்தார்.

நீரே சொல்லிவிட்டீர்.
இனிமேல்
மனுமகனின்
மாட்சிமை வருகையை
நீர் கண்டிப்பாய் காண்பீர் என்றார்.

இதோ…
தேவ நிந்தனை.
இனியென்ன சாட்சி வேண்டும்
இவன்
சாட்சியின்றி சாவுக்குரியவன்.

கூடியிருந்தவர்கள்
தலைமைக் குருக்களின்
சூதுக்குள்
குடியிருந்தவர்கள்,

அவர்கள்
இயேவைக் கொல்லச் சொல்லி
நச்சரிக்க வேண்டுமென
எச்சரிக்கப் பட்டவர்கள்.

சதிகார எதிராளிகளின்
அவையில்,
நீதிப் பறவை
நிர்மூலமாக்கப் பட்டது.

வாழ்வின் உச்சத்தை போதித்தவர்
கன்னங்களில்
எச்சில் உமிழப்பட்டது.

உன்னதங்களின் தேவனின்
கன்னங்களில் அறைகள் விழுந்தன.

வீதிகளில் இன்னும்
வெளிச்சம் விழவில்லை,
மக்கள் இன்னும்
விழித்து எழவில்லை.

No comments:

Post a Comment