Friday, August 3, 2018

எண்ணையற்ற விளக்குகள்


விழிப்பாய் இருப்பதன்
தேவையை
விளக்கினார் இயேசு.

விண்ணரசை,
மணமகனை எதிர்கொள்ளச் சென்ற
பத்துக் கன்னியருக்கு
ஒப்பிடலாம்.

மணமகன் வருகையில்
விளக்குடன் சென்று
வரவேற்கவேண்டும்,
அவருடன்
மணவீட்டில்
பிரவேசிக்க வேண்டும்.

இரவின் ஆரம்பத்தில்
விளக்குடன்
காத்திருந்தார்கள் காரிகைகள்.

காத்திருந்த பத்துபேரில்
ஐவர் அறிவிலிகள்.
அவர்கள்
விளக்கை எடுத்தார்கள்
அழுக்கைத் துடைத்தார்கள்.
திரியை சரி செய்தார்கள்
கரியை சரி செய்தார்கள்
ஆனால்
எண்ணை எடுக்க மறந்தார்கள்.

மிஞ்சிய அஞ்சு பேர்
விவேகிகள்.
அவர்கள்
விளக்கும் எண்ணையும்
தனித் தனியே எடுத்தார்கள்.
திரிக்கும் ஒளிக்குமான
உறவு
எண்ணையின் வழி என்பதை
விவேகிகள் விளங்கியிருந்தார்கள்.

இதோ,
இரவு அடர்த்தியாகிறது
மணமகனை காணவில்லை.

தூக்கம்
மங்கையரை திருடிக் கொள்ள
இருட்டு
விளக்குகளை இழுத்துக் கொள்ள
அடர் தூக்கத்தில்
அனைவரும் அடங்கினார்கள்.

நள்ளிரவு மெல்ல
நகர்ந்து வந்த போது,
‘ மணமகன் வருகிறார்
எதிர் கொள்ள வாருங்கள் ‘
அழைப்பு கன்னியர்க்கு
அனுப்பப்பட்டது.

விவேகிகளின் விளக்குகள்
கம்பீரமாய் எரிய
அறிவிலிகளின் விளக்குகள்
அணைந்து போயின.

விவேகிகளின் விளக்குகள்
தீபத்தை விழிக்க வைத்தன,
அறிவிலிகளின் விளக்குகளில்
இரவு உறங்கிக் கிடந்தது.

எண்ணையின் தேவை
அப்போது தான் புரிந்தது
அவர்களுக்கு.

அணையும் எங்கள்
விளக்குகளைப் பாருங்கள்
கொளுத்திக் கொள்ள கொஞ்சம்
எண்ணை தாருங்கள்.

அறிவிலிகளின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.

இல்லை
உங்களுக்கு எண்ணையளித்தால்
எங்கள் விளக்குகளும்
இருட்டைப் போர்த்திக் கொள்ளும்
குருடாகிப் படுத்துக் கொள்ளும்

கடைக்குக் செல்லுங்கள்
தேவையைச் சொல்லுங்கள்
பின்
விளக்குகளை
கொளுத்திக் கொள்ளுங்கள்
என்றார்கள்.

அறிவிலிகள் கடைகளைத் தேடி
நடந்தார்கள் அந்த
நள்ளிரவில்.

காத்திருந்த கன்னியர்
மணமகனை வரவேற்று
மணவீட்டில் புகுந்தார்கள்
வாசல் கதவுகள்
பூட்டப்பட்டன.

காலம் கடந்து
கதவு தட்டும் ஓசை,
வெளியே
அறிவிலிகளின் அவல ஓசை.

ஆண்டவரே எங்களுக்காய்
கதவுகளைத் திறந்து விடும்.

மணமகன் பதில் சொன்னார்,
கதவைத் திறப்பது
கனவிலும் நடக்காது.
நீங்கள் யாரென்பதே
எனக்குத் தெரியாது.

விழிப்பாய் இருப்பவரே
விண்ணரசிலும் இருப்பார்.

விதைக்கையில் தூங்கியவன்
அறுவடையில்
விழித்தெழுந்தாலும்
களஞ்சியம் காலியாகவே கிடக்கும்.

மனுமகன் வருகை
எப்போதும் நடக்கலாம்,
இதயங்களை நீங்கள்
இருக்கைகளாக்குங்கள்.

வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்.

No comments:

Post a Comment