கூடத்தின் முற்றத்தில்
குளிரைக் கொலைசெய்ய
விறகுக்கு மேல்
வன்முறை வெப்பம்
கொழுந்து விட்டு எரிந்தது.
பேதுரு,
வெப்பத்தின் தெப்பத்தில்
முக்காடிட்டு
மறைந்திருந்தார்.
ஊழியக்காரி ஒருத்தி
பேதுருவைப் பார்த்ததும்
புருவம் சுருக்கினாள்,
ஐயம் பெருக்கினாள்.
நீ
இயேசுவோடு இருந்தவனா ?
கேள்வி விழுந்த வேகத்தில்
தடுமாறினார் பேதுரு.
நானா ? இல்லையே !
படபடத்தது பதில்.
முகத்தை இன்னும்
முறையாய்
மறைத்து
மறைந்திருந்தார் பேதுரு.
இயேசுவுக்கு என்ன நிகழ்கிறது
என்பதை
அறிந்து கொள்ளும்
வலி கலந்த ஆர்வம் அவருக்கு.
இரண்டாவதாய் இன்னொருத்தி
அருகே வந்து
பதுங்கிய
பேதுருவிடம் பேசினாள்.
பேதுருவின் பேச்சில்
உழைக்கும் வர்கத்தின்
வாசனை,
மீன் மணத்துடன் மிதந்திருக்க
வேண்டும்.
உன் பேச்சே உன்னை
காட்டிக் கொடுக்கும் கண்ணாடி,
நீ
அவனோடு இருந்தவன் தான்
அவள் அழுத்தமாய் உரைத்தாள்.
அது நானில்லை,
அவர் யாரென்றே அறியேன்
பேதுரு மீண்டும்
தப்பித்தல் பதிலை ஒப்பித்தார்.
அவள்
தன் சந்தேகத்தை
சில காதுகளுக்குள் ஊற்றினாள்.
மூன்றாம் முறையாக,
வேறு சிலர்
பேதுருவின் பக்கம் வந்தனர்.
உண்மையைச் சொல்.
நீ அவனுடைய சீடன் தானே
மிரட்டல் குரலில்
மிரண்டு பதிலிறுத்தார் பேதுரு.
இல்லை
இல்லை
இல்லவே இல்லை.
மறுதலித்த ஓசை
முடிவடைந்த வினாடியில்
சேவல் ஒன்று
எங்கோ சப்தமிட்டது.
பேதுருவின் உள்ளத்தில்
அதிர்ச்சிப் பருந்து
வந்தமர்ந்தது.
சேவல் ஒலி
கேட்கும் முன்
மும்முறை என்னை மறுதலிப்பாய்
எனும்
இயேசுவின் ஒலி
மனதில் எதிரொலிக்க
வெளியே சென்று கதறி அழுதார்.
No comments:
Post a Comment