செல்வன் ஒருவன்
பயணம் சென்றான்.
பயணம் துவங்கும்
மணிக்கு முன்,
ஊழியரை அழைத்து
செல்வத்தை அவர்களுக்குப்
பகிர்ந்தளித்தான்.
ஒருவனுக்கு ஐந்து,
இன்னொருவனுக்கு இரண்டு,
மூன்றாமவனுக்கு ஒன்று
என
தாலந்துகளை தந்து சென்றான்.
ஐந்து பெற்றவன்,
வியர்வைக்குள் விழுந்து
உழைத்தான்
மேலும் ஐந்து சம்பாதித்தான்.
இரண்டு பெற்றவன்,
இரவும் பகலும் இடைவிடாமல்
உழைத்து
மேலும் இரண்டு சம்பாதித்தான்.
ஒன்று பெற்றவன்
ஒன்றுக்கும் உதவாதவன்,
அவன்
தாலந்தை மண்ணுக்குள்
புதைத்து வைத்து தூங்கினான்.
புதைத்தது விதையானால்
முளைக்கும்,
பணம் என்ன செய்யும்?
தலைவன் திரும்பினான்
ஊழியரை பார்க்க விரும்பினான்.
ஐந்து தாலந்துக்காரன்
பத்தோடு வந்தான்,
தலைவன் உச்சி குளிர்ந்தான்.
நீ
நல்ல ஊழியனின் உதாரணம்.
உன்னை
அதிக பணிகளுக்கு
அதிபதியாக்குவேன்
என்று பாராட்டினான்.
இரண்டு பெற்றவன்
நான்கோடு வந்தான்
தலைவன் பெருமிதப்பட்டான்.
நீ
பெருமைக்குரிய பணியாளன்
சிறியவற்றில்
நம்பிக்கை காத்தாய்
பெரியவற்றிற்கு
உரியவன் ஆவாய் என்றான்.
ஒன்று பெற்றவன்
ஓரமாய் வந்தான்,
ஐயா,
நீர் விதைக்காத இடத்தில்
அறுவடை செய்வீர்,
தூவாத இடத்தில் சேர்ப்பீர்.
இதோ
உமக்குப் பயந்து நான்
நிலத்தில் புதைத்த
உம் தாலந்து.
நீர் கொடுத்தது
அப்படியே இருக்கிறது.
பாழாக்கவில்லை
என்றான்.
வந்த தலைவன் நொந்தான்.
கெட்ட ஊழியன் நீ.
வட்டிக்காவது என்காசை
விட்டிருந்தால்
வட்டியோடு நான்
பெற்றிருக்கக் கூடும்.
உன்மேல் வைத்த நம்பிக்கை
எனக்கு
வருத்தம் வருத்துகிறது.
நீ
எதிர்பார்ப்புகளை
எரித்துவிட்டாய்.
பாறையில் பெய்த
பருவ மழைபோல
வீணாய் போன தாலந்து
வெறுமனே இருந்தது.
இதோ,
பயன் படாத இவன் தாலந்தைப்
பிடுங்கி,
பத்து இருப்போனுக்கு கொடுங்கள்.
இவனை
வெளியிருளில் தள்ளுங்கள்,
அங்கே அவன்
அழுகையை அள்ளட்டும்
பற்கடிப்பை மேற்கொள்ளட்டும்.
பயன்படுத்தத் தந்தவற்றைப்
பயன்படுத்தாததும்
பாவமே.
உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
உள்ளதும் பறிக்கப்படும்.
காலம் உங்களை
கால்களில் சக்கரம் கட்டி
கடத்திச் செல்கிறது,
நீங்கள்
நன்மையின் அச்சாயை
நழுவவிடாதீர்கள்
No comments:
Post a Comment