Friday, August 3, 2018

இறுதித் தீர்வு இது தான்


இறுதி நாளில்
பொதுத் தீர்வை நடக்கும்.

இறந்தவர் அனைவரும்
உயிருடன் எழுவர்
இறைவன் முன்னால்
பணிவுடன் தொழுவர்.

இடையன் ஆடுகளை
தனித்தனியே பிரிப்பதுபோல்
மனுமகனின்
இனம்பிரித்தலும் இருக்கும்.

செம்மறிகளும் வெள்ளாடும்
இடையனுக்கு
பார்த்ததும் புரிவதுபோல்,
நல்லோரும் தீயோரும்
கடவுள் கண்ணுக்கு காட்சி தருவர்.

நல்லவர் வலப்பக்கமும்,
தீயோர் இடப்பக்கமும்
இருபிரிவாக இருப்பர்.

வலப்பக்கம் இருப்போரை
விண்ணக வாழ்வு
வரவேற்கும்.

மனுமகன் அவர்களுக்கு சொல்வார்,
வாருங்கள்,
நன்மையை விதைத்து
நல்லவற்றை அறுவடை செய்தவர்களே
வாருங்கள்.

உங்கள்
நேசத்தின் கிளைகளில்
என்னை
இளைப்பாற விட்டவர்கள்
நீங்கள்.

நான் பசித்தபோது
புசிக்கக் கொடுத்தவர்கள்,
என் தாகத்தின் நாவுக்கு
தண்ணீர் வடித்தவர்கள்,
என் நிர்வாணத்துக்கு
ஆடை உடுத்தவர்கள்,
என் தனிமைச் சிறையில்
ஆறுதல் கரமானவர்கள்,
என் நோயின் வலிகளில்
உடனிருந்தவர்கள் நீங்கள் தான்.
வாருங்கள் என்னோடு
என்பார்.

அப்போது நீதிமான்கள்,

இவையெல்லாம் எப்போது
நிகழ்ந்தது நாயகனே
என்பர்.

இதோ,
ஓர் சின்ன ஏழைக்கு நீங்கள்
செய்த நன்மைகள் எல்லாம்
எனக்காய் செய்த
தவங்களாயின.
இப்போது அதற்கான வரம்
வழங்கப்படுகிறது.

எப்போதெல்லாம்
சுயநல மிருகங்களை
சிறையில் அடைத்துவிட்டு
பொது நலப் புறாக்களோடு
பவனி வந்தீர்களோ,

எப்போதெல்லாம்
தனி மனித விருப்பங்களை
விலக்கி விட்டு
சமுதாய துயர் துடைக்க
கைக்குட்டை கொடுத்தீர்களோ

எப்போதெல்லாம்
தேவையின் தேடல்களுக்கு
நீங்கள்
விடையானீர்களோ
அப்போதெல்லாம்
என்னோடு உறவாடினீர்கள்.
என்பார்.

இடப்பக்கம் இருப்போரிடம்
கோபக் கண்களோடு
கடவுள் பேசுவார்.

சபிக்கப்பட்டவர்கள் நீங்கள்
என்னை
நிராகரிப்பதை மட்டுமே
நிராகரிக்காதவர்கள் நீங்கள்.

என்னை ஏற்றுக் கொள்வதை
மட்டுமே
ஏற்றுக்கொள்ளாதவர்கள்
நீங்கள்.

செல்லுங்கள்,
அணையா நெருப்பு
உங்களை அணைத்துக் கொள்ளும்.
மரணம் இல்லா
வேதனையின் விளைநிலமாகட்டும்
உங்கள் தேகம் என்பார்.

இடப்பக்கம் இருப்போர்
திடுக்கிடலோடு
இறைவனிடம்,

ஐயோ கடவுளே
எப்போது உம்மை நாங்கள்
நிராகரித்தோம்.
நீர் எங்களிடம்
வரவே இல்லையே
பின் எப்படி தரவே இல்லை என்கிறீர்
என்பார்கள்.

உன் அயலானின்
வலி களையா வினாடிகள் எல்லாம்
என்னை
அழவைத்த தருணங்களே.

எனவே,
மண்ணுலக மனிதரில்
என் பிம்பத்தைப் பார்ப்பவன்
பாக்கியவான்.
எதிர்பலன் எதிர்பாராமல்
நன்மை தூவுபவனே நீதிமான்.

அயலானைப் புறக்கணிக்கும்
ஆன்மீகப் பணிகள்
எதுவுமே
வான் வீட்டுக்கு உகந்ததல்ல
என்பதே
இறுதித் தீர்வை தரும் பாடம்.

No comments:

Post a Comment