Friday, August 3, 2018

திமிர் வாதத்தின் திமிர் தீர்கிறது


தலைவன் ஒருவனின்
ஊழியனுக்கு வந்தது
உயிர் உலுக்கும் திமிர்வாதம்.

ஒரு வார்த்தை விழுந்தால்
ஊழியன் நலமாய் எழுவான்,
நம்பினான்
நூற்றுவர் தலைவன்.

இல்லம் செல்லலாம்
என்கிறார் இயேசு.
தாழ் பணிந்து
தாழ்மை சொல்கிறான் தலைவன்.

உம் பாதம்
படுமளவுக்கு
என் தகுதி தகாது பரமனே,
ஒரு வார்த்தை சொன்னாலே
ஊழியன் நலமாவான்.

எனக்கு பணிசெய்யவும்
பணியாளர் உண்டு
வா என்றால் வருவான்
போ என்றால் போவான்
செய் என்றால் செய்வான்
எதிர்ப்பதில்லை எதுவும்.

நீரும்
ஆணையிட்டால் போதும்
அருள் வந்து சேரும்
என்றான்.

அவன் நம்பிக்கையின்
ஆழத்தில் அதிசயித்தார்
ஆண்டவர்,
விசுவசித்தபடி நடக்கும் என்றார்,
அவ் வினாடியே
ஊழியன்
வாதம் விலக வலுவடைந்தான்.

No comments:

Post a Comment