Thursday, August 2, 2018

இயேசுவின் போதனைகள்


மலைப் பொழிவு



போதனைகள்!
அவை வாழ்வின் சுருக்கங்களைச்
சலவை செய்யும்
சாமர்த்திய சாலிகள்.

வாழ்வுக்கான போதனைகள்
மனசை வளமாக்கும்,
தடுமாற்றம் விடுத்து
தடம் மாற்றச் சொல்லும்.

இயேசு போதித்தார்.
அன்றாட வாழ்க்கையை
அலசிப் பிழியும் போதனைகள்.

கழுத்தறுக்கும்
ஆயுதப் போதனைகளல்ல
அழுக்கறுக்கும்
ஆயத்தப் போதனைகள்.


மலை மேல் ஒரு நாள்
மனுமகன் போதித்தார்.
அது
சட்டங்கள் மேல்
ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது.
தாழ்வு மன இதயங்களை
இழுத்து நிமிர்த்தியது.
சோர்வுற்ற சமுதாயத்துக்கு
புத்துணர்வுத் தைலம் பூசியது.

அந்தப் போதனை
இது தான்.


எளிய மனம் கொண்டவர்கள்
பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே.

துயருறுவோர்
பேறுபெற்றோர்
ஆறுதல் அவர்களுக்கானதே.

சாந்தமுள்ளோர்
பேறுபெற்றோர்,
மண்ணுலகு அத்தகைய மனிதருக்கே.

நீதி யின் மேல்
பசியும் தாகமும் கொண்டோ ர்
பேறுபெற்றோர்,
நிறைவு அவர்களுக்கான வரம்.

இரக்கம் கொள்வோர்
பேறுபெற்றோர்
இரக்கம் பெறுவோர் அவரே.

தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்,
கடவுளைக் காணும்
கண்கள் அவர்களதே.

சமாதானம் விதைப்போர்
பேறுபெற்றோர்,
கடவுளின் குழந்தைகள்
சமாதானத்தின் சந்ததிகளே.

நீதிக்காய் வதைக்கப்படுவோர்
பேறுபெற்றோர்
விண்ணரசு வாழ்க்கை
அவர்களுக்காய் ஆயத்தமானதே.

ஆண்டவர் பெயருக்காய்
அவமதிக்கப் பட்டால்
ஆனந்தப்படுங்கள்.
வானக வாழ்வில்
செல்வத்தின் அடர்த்தி அதிகமாகும்.

மனிதநேயத்தின்
மறைந்தபகுதிகளை
திறந்து வைத்து,
உறவின் உறைந்த பகுதிகளை
உருக வைத்தது
இறைமகனின் உயிர் வார்த்தைகள்.

மலைப்போதனையில்
மலைத்துப் போனது கூட்டம்.
இயேசுவை
இதய மலைகளில்
இருத்திச் சென்றது.

No comments:

Post a Comment