Friday, August 3, 2018

விண்ணரசு, விவசாயி


விண்ணரசு, விவசாயி

இயேசு
விண்ணரசு குறித்த
விளக்கங்களை
உவமை விளக்குகளாய்
ஏற்றி வைத்தார்.

விண்ணரசு
தன் விவசாய நிலத்தில்
நல்லவிதைகளை
பதியனிட்ட
ஒருவனுக்கு ஒப்பாகிறது.

பயிர் விதை விதைத்த
நிலத்தில்
களை விதை விதைக்கிறான்
பகைவன் ஒருவன்.

பூமிக்குள் பதுங்கும் வரை
விதைகளின் வித்யாசம்
வெளிச்சத்துக்கு வருவதில்லையே.

முளைகள் மெல்ல
காற்றைக் கிழித்து
பூமியைக் கடந்தபோது தான்
களைகள் கலந்திருப்பது
கண்களுக்குள் விழுந்தது.

வேலையாள் வருந்தினான்
பயிர்களின் உரத்தை
களைகள் களவாடுகிறதே
என்று
கவலைப்பட்டான்

களைகளைப் பிடுங்கி
களைந்திடவா என்றான்.

எஜமான் சொன்னார்.
வேண்டாம்,
களை பிடுங்கும் வேளை
நீ
பயிர் பிடுங்கக் கூடும்.

பயிர் ஒன்றேனும்
உயிர் விடுதலில்
எனக்கு
உடன்பாடில்லை.

அறுவடை வரை
இரண்டையும் இணைந்தே வளரவிடு,
அறுவடையின் போது
பயிரை
களஞ்சியத்துக்கும்,
களையை
தீக்குழிக்கும் அனுப்பு.

சுவர்க்கத்தின் வாசலுக்குள்
தீயவற்றின் மிதியடிகள்
கடந்து செல்ல முடிவதில்லை,
சுவர்க்கம்
பயிர்களுக்காய் பாதுகாப்பாய்
பத்திரப்படுத்தப் பட்டிருக்கின்றது.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட
நல்ல விதை,
தானால் முளை விட்டு
தானாய் கிளை விட்டு
ஆழமாய் வேர் விட்டு
தானாய்
தானியங்களை தரும்.

இதயத்தில் ஊன்றப்படும்
நற்செய்திகளும் அவ்வாறே.

நீங்கள்
பூமியெனும் வயலில்
மனிதர்களாய் முளைத்தவர்கள்,

பயிரா ? களையா ?
என
உங்களையே கேளுங்கள்,
களையானால் பயிராகும்
வழிமுறையை நாடுங்கள்.

No comments:

Post a Comment